அதிமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்கும்போதுதான் மக்களின் வாழ்வில் ஒளி பிறக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது கட்சித் தொண்டர்களுக்கு முரசொலிப் பத்திரிகையில் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் கடன் சுமையை அதிகரிக்கச் செய்து, நிர்வாகத்தைச் சீரழித்து, தொழில் வாய்ப்புகள் இல்லாத நிலையை உருவாக்கி, வேலை இல்லா திண்டாட்டத்தை பெருக்கி, மாநில அரசுக்குள்ள உரிமைகளை மத்திய அரசிடம் அடமானம் வைத்துவிட்ட அதிமுக அரசின் தற்காலிக நிவாரணங்கள் எதுவும் தமிழக மக்களுக்கு நிரந்தர தீர்வு அளிக்க போவதில்லை.
ஊழலில் திளைத்து, கஜானாவைக் கொள்ளையடிக்கும் அதிமுகவிடம் இருந்து தமிழகத்தை மீட்டு முன்னேற்றப்பாதையில் வளர்த்தெடுப்பதற்கான ஜனநாயகத் திறவுகோல்தான், வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் என்று அனைவருக்கும் தெரிந்து உள்ளது.
அதிமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்கும்போதுதான் மக்களின் வாழ்வில் ஒளி பிறக்கும். அந்த ஒளி, உதயசூரியனால் கிடைக்கும். ஜனநாயக வழியில் தமிழகத்தை மீட்போம்.
இவ்வாறு அவர் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.




