ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த குடும்பத் தலைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்துவுள்ள மணலி புதுநகரைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (32). இவருக்கு பவானி (29) என்கிற மனைவியும் மெக்காட்டிக் பேரஸ் (3) மற்றும் நோயல் கிறிஸ் (1) என இரண்டு மகன்கள் உள்ளனர். கந்தன்சாவடியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பாக்யராஜ் பணியாற்றி வரும் நிலையில், பவானி வீட்டில் இருந்தவாரு குழந்தைகளை கவனித்துக் கொண்டு வந்தார்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு பவானிக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சிறியளவில் பணத்தை முதலீடு செய்து லாபம் பார்த்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவர் அதிகளவில் பணத்தை கட்டி விளையாட துவங்கியுள்ளார். எப்போதும் வீட்டில் ரம்மி விளையாட்டு பற்றியே பேசிக் கொண்டிருந்துள்ளார்.
இதையடுத்து கணவர் பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் அவருக்கு இந்த விளையாட்டை விட்டுவிடுமாறு அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் பவானி யார் சொல்லியும் கேட்காமல் விளையாடி வந்துள்ளார். இதையடுத்து தன்னுடைய முதல் தங்கையிடம் ரூ. 1.5 லட்சம் பணத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கடனாக வாங்கியுள்ளார். அதேபோன்று கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது தங்கையிடம் ரூ. 1.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
மொத்தம் ரூ. 3 லட்சம் பணத்தையும் அவர் ரம்மி விளையாட்டில் முதலீடு செய்து, மொத்தத்தையும் இழந்துள்ளார். அதேபோன்று வீட்டிலிருந்த 20 பவுன் தங்க நகைகளை அடகு வைத்தும் விற்றும், அதையும் ரம்மி விளையாட்டில் தொலைத்துள்ளார். இதனால் எழுந்த மனச்சோர்வில் கடந்த 5-ம் தேதி இரவு 8.30 மணியளவில் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மணலி பகுதி போலீசார், பவானி குடும்பத்தாரிடம் விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான மற்றும் குடும்பத் தலைவியான பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.