மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக, 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில், மருத்துவ கல்லூரி சேர்க்கையில் 7.5% இடஒதுக்கீட்டு மசோதாவை தமிழக அரசு சட்டபேரவையில் நிறைவேற்றியது. அதன் பின்பு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கும் அனுப்பப்ட்டது. ஆனால், இதுவரையிலும் இந்த மசோதா மீது தமிழக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஆளுநர் ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்தும், அரசின் மெத்தன போக்கைக் கண்டித்தும் பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி, ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசானையை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளது.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கோரிப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, தேவர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு, செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதித்து வருவதால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
இதுக்குறித்து முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சமூக நீதி காக்கவும், அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் நலன் கருதியும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக அவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.




