ஆடு, மாடுகள் மேய்க்கும் போது இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் செங்குழி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (50). இவர் கடந்த 2019ம் ஆண்டு வயல் பகுதியில் ஆடு, மாடுகள் மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது, தன்னுடன் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த 21வயது பெண்ணை அருகில் உள்ள ஏரி ஓடைக்கு அழைத்துச் சென்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த நிலையில் பயந்துப்போன அந்தப்பெண் இதை யாரிடமும் சொல்லாமல் திருப்பூருக்கு வேலைக்குச் சென்றுள்ளார். 3 மாதங்களில் ஊர் திரும்பிய அவருக்கு தீராத வயிற்றுவலி ஏற்பட்டதை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் கர்ப்பமடைந்தது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இதற்கு யார் காரணம் எனக் கேட்க, இளங்கோவன் தான் காரணம் என்று கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு முடிவடைந்த நிலையில், நீதிபதி குற்றவாளி இளங்கோவனுக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனையும், பலாத்கார குற்றத்திற்காக ₹25,000 அபராதமும் விதித்தார். அபராதத்தொகையை கட்ட தவறினால் மேலும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும்,கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறைதண்டனையும், ₹1,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இதையடுத்து இளங்கோவனை போலீசார் கைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்றனர். ஏற்கெனவே, இளங்கோவனுக்கு இரண்டு மனைவிகள், 3 மகள்கள்,1 மகன் உள்ளனர். இதற்கிடையே அந்த பெண்ணுக்கு ஏழு மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது.