தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/07/202007211313421276_Tamil_News_IMD-Inform-Rain-Likely-chance-to-11-district-in-Tamilnadu_SECVPF.jpg?resize=615%2C350&ssl=1)
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குநர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ’வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்ன கல்லாரில் 11 சென்டி மீட்டர் மழையும், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் 9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் வருகிற 23ம் தேதி வரை மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கும், 24 ஆம் தேதி வரை கேரள கடலோர பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.