நான் தேவையின்றி அரசியலுக்கு வந்ததற்கு துணை முதலமைச்சர் ஓபிஸ் தான் காரணம் என ஜெ.தீபா குற்றம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக சொத்து இழப்பீடு நிர்ணயம் செய்து, அந்த தொகையை சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தியது.
தொடர்ந்து, வேதா இல்லத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் அரசு கையகப்படுத்தியது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜெ.தீபா தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்து ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கிருந்தீர்கள் ? எனக் கேள்வி எழுப்பியது. அத்துடன் தீபா தொடர்ந்த இந்த வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்து உத்தரவிடபட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா கூறியதாவது: ஜெயலலிதாவின் சொத்துக்களை அடைய வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை எனவும், தனது போராட்டம் சொத்துக்கானது அல்ல எனவும் உரிமைக்கானது எனவும் தெரிவித்தார்.
ஜெயலலிதா விரும்பாததால் என்னால் போயஸ் இல்லத்திற்கு செல்ல முடியவில்லை என்பது இல்லை எனவும், சசிகலாவால் தான் போயஸ் இல்லத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை. ஜெயலலிதா இருந்தபோது எனக்கும், போயஸ் இல்லத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல் சித்தரித்தனர் என்றும் பேசினார்.
ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்ம யுத்தத்தால் தான் எல்லோருக்கும் தலைவலி ஏற்பட்டது. எல்லா பிரச்சினைக்கும் காரணம் ஓ.பன்னீர் செல்வம் தான். நான் இப்போது தெய்வத்தையும், ஜெயலலிதாவின் ஆன்மாவைதான் நம்பி உள்ளேன்.
ஆறுமுகசாமி ஆணையம் 6 முறை அழைத்தும் ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜராகாதது ஏன்? நான் தேவையின்றி அரசியலுக்கு வந்ததற்கு ஓபிஸ் தான் காரணம். ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது பற்றி அதிமுக தலைவர்களுக்கு கவலையே இல்லை. 6 முறை அழைத்தும் ஓபிஎஸ் ஏன் ஆறுமுகசாமி ஆணையத்தில் அவர் ஏன் ஆஜராகவில்லை எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்