கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி, மலர் சந்தை, நான்கு மாதங்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் தலைநகர் சென்னை ஆகும். இந்த பெரும் பாதிப்பிற்கு முக்கிய பங்கு கோயம்பேடு சந்தை தான் என அரசு தரப்பே தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது கோயம்பேடு காய்கறி, மலா் மற்றும் உணவு தானிய சந்தை. இங்கு வந்த வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்களால் கொரோனா வைரஸ் பரவுவதாக, கடந்த மே மாதம் 5-ஆம் தேதி மூடப்பட்டது.
தொடர்ந்து, சென்னை அடுத்த திருமழிசையில் தற்காலிகமாக சந்தை தொடங்கப்பட்டது. ஆனாலும், அங்கு போதிய வசதிகள் இல்லாததால், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த சூழலில் தற்போது சென்னையில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து, கோயம்பேடு உணவு தானிய சந்தை மற்றும் கிடங்கை செப்.18ம் தேதி முதலும் , காய்கறி மற்றும் மலா் சந்தையை செப்டம்பா் 28-ஆம் தேதியில் இருந்து திறக்க தமிழக அரசு அண்மையில் அனுமதி அளித்தது.
அரசின் இந்த உத்தரவை அடுத்து கோயம்பேடு உணவு தானிய சந்தை கடந்த 18ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோயம்பேடு காய்கறி, மலர் சந்தை நேற்று திறக்கப்பட்டது. இரவு 8 மணியில் இருந்து முதற்கட்டமாக 194 மொத்த விற்பனை கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. கடைகளுக்கு பூஜை செய்து மொத்த விற்பனை அங்காடி உரிமையாளர்கள் விற்பனையைத் தொடங்கினர்.
அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சந்தை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கபடுகிறது. கோயம்பேடு சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உடல் பரிசோதனை செய்யவும் ஒவ்வொரு கடை முன்பு கிருமிநாசினி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது