
பல ஆண்டுகளாக காதலித்து வந்த பெண்ணை சாதிய பெயர் சொல்லி விமர்சித்த காதலனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை பல்லாவரம் அருகேவுள்ள பம்மல் என்கிற பகுதியைச் சேர்ந்தவர் முரளி (34). வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர், தன்னுடன் கல்லூரியில் படித்த பெண்ணை நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
ஆனால் சமீபமாக வழக்கறிஞர் காதலியிடம் இருந்து அவர் விலகும் முயற்சியில் இருந்துள்ளார். சரிவர பேசாமல், நெருக்கம் காட்டாமல் முரளி இருந்துள்ளார். இதனால் காதலிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் காதலி முரளியிடம் விசாரித்துள்ளார். அப்போது தனக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்கவுள்ளதாக கூறிய முரளி, காதலியை சாதிய பெண் சொல்லி இழிவுப்படுத்தியுள்ளார்.
இதனால் மனமுடைந்த பெண் பல்லாவரம் சட்டம் ஒழுங்கு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதை விசாரித்த ஆய்வாளர் தயாள் தலைமையிலான போலீசார் வழக்கறிஞர் முரளியை கைது செய்தனர்.
மேலும் அவர் மீது 417, 420, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது முரளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.




