முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியினை கடைப்பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் குறித்த ஆதாரங்களை முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடலாம் என மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த சின்கா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னைக்கு அடுத்தாற்போல் தற்போது மதுரையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தற்போது வரை மாவட்டம் முழுவதும் 7858 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளாகியுள்ள நிலையில் பலர் வீட்டுக்கண்காணிப்பில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலை தொடர்ந்து நீடிக்க கூடாது என்ற அச்சத்தில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த சின்கா தற்போது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதன்படி பொது இடங்களுக்கு மக்கள் வருகையிலும், மற்றவர்களுடன் பேசும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், மேலும் கடைகளுக்கு செல்லும் போது தனிமனித இடைவெளியினை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் விதிமுறைகளை பின்பற்றுபவர்கள் யாரையும் பொது இடங்களில் பார்த்தால், புகைப்படம் அல்லது வீடியோ ஆதாராங்களுடன் மதுரை மாநகர வாட்ஸ் அப் குறியீட்டு எண் 830002100 அல்லது Madurai city police என்ற முகநூல் பக்கத்தில் பதிவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.