
மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தை மது போதையில் உளறிய நபரை சக நண்பர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகர்ஜூனன் (30) மற்றும் ஷர்மிளா (27) தம்பதி. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமான சில மாதங்களிலே தம்பதிகளுக்கு இடையில் பிரச்னை இருந்து வந்துள்ளது. மேலும் மனைவி ஷர்மிளா மீது நாகர்ஜூனனுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட சண்டையில் மனைவி ஷர்மிளாவை கத்தியால் குத்தி கொன்றுள்ளார் நாகர்ஜுனன்.
அதையடுத்து ஒன்றுமே தெரியாதது போல நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தச் சென்றுள்ளார். அப்போது தலைக்கேறிய மதுபோதையில் இருந்த நாகர்ஜூனன், மனைவியை கத்தியால் குத்தி கொன்றதை நண்பர்களிடம் கூறியுள்ளார்.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கூறி, அவர்களை சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர். அவர்கள் ஷர்மிளாவின் உடலை கைப்பற்றி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாகர்ஜுனாவை கைது செய்த காவல்துறை, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.




