ஆகஸ்ட் 8-ந் தேதிக்குள் புதுப்பிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை கழகம் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கட்சியினரும் தங்களது கட்சி உறுப்பினர் சேர்க்கையை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. தரப்பிலும் கட்சியை வலுப்படுத்தவும், உறுப்பினர் சேர்க்கையை வலுப்படுத்தவும் ஏற்கனவே கட்சித் தலைமை நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று இணைந்து அறிக்கை வெளியிட்டனர்.
புதிய உறுப்பினர்களின் சேர்க்கை மற்றும் ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் தங்கள் பதிவை புதுப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவர்கள், உரிய கட்டண தொகையுடன் விண்ணப்ப படிவத்தை ஆகஸ்ட் 8-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. உறுப்பினர் அட்டை உள்ளவர்கள் மட்டுமே கட்சி அமைப்புத் தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் முடியும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.