நிவர் புயல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கடலூரில் 150 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழு இன்று சென்றது.
நிவர் புயல்
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள நிவர் புயல் மரக்காணத்துக்கும், காரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் புயல் காற்று அடிக்கும், பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட பகுதி பொறுப்பு அதிகாரிகள் அந்தந்தப் பகுதியில் தங்க வேண்டும், மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்புக்குழு
இந்த நிலையில் இன்று அரக்கோணத்தில் இருந்து கடலூருக்குத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வந்துள்ளனர். உதவி கமாண்டர் மனோஜ் பிரபாகரன் தலைமையில் 150 பேர் கொண்ட 6 குழுக்கள் வந்துள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 25 பேர் உள்ளனர். இதில் 3 குழுக்கள் கடலூரிலும், 3 குழுக்கள் சிதம்பரத்திலும் தங்க வைக்கப்பட உள்ளன.