சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில், அரிசி குடும்ப அட்டையாக மாற்றி கொள்ளலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, பொது விநியோக திட்டத்தில் தற்போது 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்போர் பெரும்பாலானோர் தங்களது குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றி தரவேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதனை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.
அதன்படி, சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டை நகலை இணைத்து இன்றிலிருந்து(டிச.5 முதல்) டிச.20ஆம் தேதி வரைக்கும் www.tnpds.gov.in என்ற இணையதளத்தின் முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உதவி ஆணையரிடம் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு சர்க்கரை குடும்ப அட்டைகள தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.