தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து மேலும் அதிகரித்து வருகிறது.
அதன்படி, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,56,369 ஆக இருந்தது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 4,538 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், தமிழகத்தில் இன்று மட்டும் 3,391 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,10,807 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தற்போது வரை 2,315 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனை மையங்கள் மூலம் 18 லட்சத்து 31 ஆயிரத்து 304 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1,243 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 83,377 ஆக அதிகரித்துள்ளது.