விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு நடத்தப்படும் சிறப்பு பூஜைகளை இணையதளத்தில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சன்னத்திக்கு உள்ளே முக்குறுணி விநாயகருக்கு, ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை காண்பதற்கு அதிகளவில் மக்கள் வருவது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்களின் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மீனாட்சியம்மன் கோயில் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு 18 படியால் ஆன பெரிய கொழுக்கட்டை செய்யப்பட்டு, காலை 10.45 முதல் 11.15 மணி வரை பூஜை நடத்தப்படுகிறது. பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பூஜைகளை இந்து சமய அறநிலையத்துறை இணைய தளமான www.tnhrce.gov.in மற்றும் மீனாட்சி கோயில் இணையமான www.maduraimeenakshi.org மற்றும் திருக்கோயிலின் maduraimeenakshi youtube அலைவரிசையிலும் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.