ஏழைக்கு 5 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளித்து வரும் ஏழைகளின் நிஜ மெர்சல் ஹீரோவான மருத்துவர் திருவேங்கடம் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மருத்துவத்தை வணிகமயமாக்களுக்கு மட்டுமே பலர் பயன்படுத்தி வரும் நிலையில், கடந்த 40 ஆண்டுகளாக வெறும் 2 மற்றும் 5 ரூபாயினை மட்டும் மக்களிடம் கட்டணமாக பெற்றுக்கொண்டு மகத்தான மருத்துவ சேவை புரிந்து வந்தவர் தான் நம்ம வடசென்னை டாக்டர் திருவேங்கடம். 1973 ஆம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்த இவர், இலவசமாக வியாசார்பாடியில் உள்ள ஏழை மக்களுக்கு 5 ரூபாய் கட்டணம் பெற்று மக்களுக்கு சிகிச்சை அளித்துவருகிறார்.
பல ஆண்டு காலமாக 2 ரூபாய் மட்டும் கட்டணம் வசூலித்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அதன் பின்பு 5 ரூபாய் என உயர்த்தி பலருக்கும் சிகிச்சை அளித்து வந்தவர் தான் நம் மக்களின் மருத்துவர் திருவேங்கடம். பணத்தினை பெரிய பொருட்டாக மதிக்காமல், மக்களின் அன்பினை மட்டும் பெற்று மகத்தான மருத்துவ சேவையாற்றி வந்த நம் நிஜ மெர்சல் ஹீரோ திருவேங்கடம் உயிரிழந்த சம்பவம் அனைவரிடம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பலர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
“காமராஜர் கொடுத்த இலவச கல்வியை கொண்டு படித்த நான் எப்போதும் மக்களுக்கு குறைவான கட்டணத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே என் கனவு” அதனை என் வாழ்வில் எப்போதும் நிறைவேற்றுவேன் என்பது மட்டும் மருத்துவர் திருவேங்கடத்தின் வார்த்தைகளாக இருக்கும். இதனை தான் தன் வாழ்நாளில் நிறைவேற்றியும் காட்டியுள்ளார். தற்போது அவருடைய இறப்பு அவரின் குடும்பத்தினர் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த ஏழை மக்களையும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இவரைப்போன்று மீண்டும் மக்களுக்கு சேவை செய்ய இளம் மருத்துவர்கள் வந்தால் மட்டுமே இந்த மகத்தான மருத்துவர்களின் ஆத்மா சாந்தியடையும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.