கடலூரில் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி நாடகமாடிய பெண் அதற்காக குழந்தை ஒன்றை திருடியபோது வசமாக போலீசில் சிக்கிக் கொண்டார்.
கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று மணிகண்டன்-பாக்கியலட்சுமி தம்பதியின் பிறந்த பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டது. இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து பெண் ஒருவர் குழந்தையுடன் புதுவை பேருந்தில் ஏறியது தெரியவந்தது. உடனடியாக காவல்துறையினர் புதுவை பேருந்து நிலையத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையுடன் வந்த பெண் புதுச்சேரியில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ராஜீவ் மருத்துவமனையில் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் இருந்த பெண்ணை சுற்றி வளைத்து காவல்துறைனர் கைது செய்தனர். கடலூர் அருகே உள்ள குமாரபுரத்தைச் சேர்ந்த நர்மதாவுக்கு கருவுற்ற நான்கு மாதத்தில் கரு கலைந்து உள்ளது. இதனை குடும்பத்தாரிடம் மறைத்த நர்மதா தான் கர்ப்பமாக இருப்பதாக குடும்பத்தை நம்ப வைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து அவருக்கு வளைக்காப்பும் நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று வயிறு வலிப்பதாகக் கூறி கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற நர்மதா, அங்கு குழந்தையை கடத்திவிட்டு, அங்கிருந்து புதுவை அரசு மருத்துவமனைக்குச் சென்று குழந்தையுடன் சேர்ந்துள்ளார்.