தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளுக்கான நிதி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பங்கேற்றார். அப்போது, அவர் கொரோனா தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் உள்ளிட்டவை குறித்து பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளாட்சித் துறை, காவல் துறை, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை போன்ற துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் இந்த நோய்த் தடுப்புப் பணிக்கு பேருதவியாக செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கும் நன்றி. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதை கட்டுப்படுத்துவதற்கு அரசு தொடர்ந்து சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை அளிக்கிற ஆலோசனைகளின்படி நம் மருத்துவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அதனால் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் சதவீதம் குறைந்திருக்கிறது.
குணமடைந்தவர்களின் சதவீதம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முழுக்க, முழுக்க மக்களுடைய ஒத்துழைப்பினால் தான் இந்த நோய்ப் பரவலை கட்டுப்படுத்த முடியும். அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடித்தால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். பாதிக்கப்பட்ட அனைவரையும் குணமடையச் செய்வதற்கான மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு உயிரும் அரசுக்கு மிக முக்கியம். மக்களைக் காப்பதுதான் அரசின் கடமை. அந்த அடிப்படையில்தான் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடையச் செய்கிறார்கள். பொதுமக்கள் அரசு அறிவிக்கும் வழிமுறைகளை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது, அதற்குப் பதிலாக அவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதற்கும் அரசு உத்தரவு வழங்கியிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்ததன் மூலம் மக்கள் பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இதற்குத் தேவையான நிதி உடனுக்குடன் வழங்கப்படுகிறது, நிதி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.
அதேபோல, மருத்துவர்களுக்குத் தேவையான உபகரணங்களான என்-95 முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. போதிய கையிருப்பும் உள்ளது. மருத்துவப் பரிசோதனைகளும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நம் மாநிலத்தில் தான் அதிக அளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. கடந்தாண்டு சரியான மழை பெய்ததால், நல்ல விளைச்சலை கண்டிருக்கிறோம்.
அரசு, தொழில் மற்றும் வேளாண்மைக்கு முன்னுரிமை வழங்கி இரு தொழில்களையும் இரண்டு கண்களைப் போலப் பாதுகாத்து, வேளாண் தொழில் சிறக்கவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க புதிய தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களை உருவாக்கி, நிலையான குடிநீர் வசதியை இந்த மாவட்டத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். இந்த மாவட்டத்தில் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறன. மேலும் பல தடுப்பணைகள் கட்டும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது என அவர் பேசினார்.