திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ளது பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரி உள்ளது. இந்த கடையில் கடந்த வருடம் 2 கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொள்ளையை நடத்தியது வட இந்திய கொள்ளை கும்பல் என அனைவரும் நினைத்து விசாரணையை தீவிர படுத்தினர் ஆனால் இந்த கொள்ளையை நடத்தியது பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் என்ற தகவல் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
திருவாரூரை சேர்ந்தவர் முருகன் (வயது 44). கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிப்பதில் பலே கில்லாடி. இவர், தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் கைவரிசை காட்டி உள்ளான். முருகன் மீது ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன. கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதில் ஒவ்வொரு கொள்ளை கும்பலும் தனித்தனி முறைகளை கையாளுவார்கள். ஆனால் முருகன் தலைமையிலான கொள்ளை கும்பல் ஒருமுறை திட்டமிட்டு களத்தில் இறங்கி விட்டால் கொள்ளையடித்து விட்டு தான் திரும்புவார்கள்.
மெலிந்த உடல் தேகத்துடன் பார்ப்பதற்கு பரிதாபத்துக்குரிய ஆளை போல் காட்சி அளிக்கும் முருகன், போலீசாருக்கே சவால் விடும் வகையில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதில் கைத்தேர்ந்தவனாக இருந்துள்ளான் . கொடூர நோயால் பாதிக்கப்பட்ட முருகன் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.
திருச்சி நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய திருவாரூர் முருகன் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான்.6 மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொள்ளையன் முருகன் இன்று உயிரிழந்தார்.