தாய்லாந்தில் மன்னரை அவமதித்த பெண்ணுக்கு 43½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தாய்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாங்காங் :
தாய்லாந்தில் மன்னரின் முடியாட்சி குறித்தும், மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் தொடர்ந்து அறவழியில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தாய்லாந்து காவல்துறையினர் சர்ச்சைக்குரிய சட்டத்தை கையில் எடுத்தனர். அதன்படி, லெஸ் மஜாஸ்ட்டே என்னும் சட்டத்தின்படி அரச குடும்பத்தை எதிர்த்து யார் கருத்து கூறினாலும் அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்தது.
Read more – இன்றைய ராசிபலன் 20.01.2021!!!
இந்தநிலையில், தாய்லாந்தில் இதுவரை இல்லாத அளவிற்கு லெஸ் மஜாஸ்ட்டே சட்டத்தின் படி, பெண்ணுக்கு 43½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தாய்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னாள் அரசு ஊழியரான இந்தப்பெண், மன்னரை அவமதிக்கும் விதமாக பேஸ்புக் மற்றும் யூடியூப் தளங்களில் பதிவுகளை வெளியிட்டதாக கூறி கடந்த 2015 ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதன்பிறகு கடந்த 3 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.
இவர் மீது இருந்த வழக்கானது தாய்லாந்து நீதிமன்றத்தில் இருந்து பாங்காங் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நேற்று இந்த பெண்ணின் வழக்கானது விசாரணைக்கு வந்தபோது, பெண் அரசு ஊழியர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால் 43½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தாய்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், மன்னருக்கு எதிராக போராடும் மாணவர் அமைப்புக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் இந்த தீர்ப்பை பார்க்கப்படுகிறது.