இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காற்றாலை துறைகளில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அதானி குழுமம் ஆராய்ந்து வருவதாக அரசுக்கு சொந்தமான சிலோன் எலெக்ட்ரிசிட்டி வாரியம் (CEB) தெரிவித்துள்ளது.
இலங்கையின் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை மேம்பாடு செய்வதற்கும், இயக்குவதற்கும் அண்மையில் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது அதானி குழுமம். இதன்பின்னர், தனிப்பட்ட பயணமாக தற்போது இலங்கைக்கு சென்றுள்ள அதானி குழுமங்களின் தலைவர் கெளதம் அதானி, இலங்கை அதிபர் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். ஆனால் சந்திப்பு பற்றிய விவரங்களை இரு தரப்பினரும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், இலங்கையின் காற்றாலை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அதானி குழுமம் ஆராய்ந்து வருவதாக தெரிகிறது. அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி மற்றும் 10 பேர் கொண்ட மூத்த அதிகாரிகள், இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலமாக திங்கட்கிழமை மன்னாரின் வடகிழக்கு மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்தனர் என சிலோன் எலெக்ட்ரிசிட்டி வாரியத்தின் துணை தலைவர் நலிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.
மன்னார் காற்றாலை ஆற்றல் பூங்காவின் 100 மெகாவாட் திறன் கொண்ட இரண்டாவது யூனிட் திட்டம் முதலீட்டாளர்களுக்கு உருவாக்கம், இயக்கம் மற்றும் பரிமாற்றம் (BOOT) அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.