ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்ளிட்ட 15 பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ சிகிச்சை, கல்வி மற்றும் வேலைகளைப் பெறுவதற்காக அண்டை நாடான பாகிஸ்தானுக்குச் செல்கின்றனர்.
வன்முறை, மத துன்புறுத்தல் மற்றும் வறுமை காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 30 லட்சம் ஆப்கானஸ்தான் அகதிகள் மற்றும் பொருளாதார காரணமாக குடியேறியவர்கள் பாகிஸ்தானில் உள்ளனர்.
அந்த வகையில், ஆப்கானிஸ்தான் ஜலாலாபாத் நகரில் உள்ள, கால்பந்தாட்ட மைதானத்தில் வைத்து பாகிஸ்தான் தூதரகம் சார்பில் விசாக்களுக்கு விண்ணப்பிக்க இன்று டோக்கன் வழங்கப்பட்டது. இதற்காக அங்கு கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் விண்ணப்பங்களை வாங்க முண்டியடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி, மூச்சுத் திணறியும், உடல் நசுங்கியும் பெண்கள் உள்பட 15 ஆப்கானிஸ்தானியர்கள் பலியானதாக அறிவிக்கபட்டுள்ளது.
எட்டு பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். கூட்டத்தில் நின்று இருந்த பல வயதானவர்களும் காயமடைந்தனர் என கூறப்ப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.