கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காது கேளாமை ஏற்பட வாய்ப்புள்ளதாக, மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
உலக அளவில் மனித உயிர்களை கொன்று குவித்துள்ள கொரோனா வைரசால், மனித குலத்தின் இயல்பு வாழ்க்கை முறையே மாறியுள்ளது. கொரோனா தொற்றால் 4 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், 3 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து விடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் நுரையீரலை பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதேசமயம், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், சிலருக்கு மற்ற உறுப்புகளையும் இந்த நோய்த்தொற்று பாதித்துள்ளது.
அதன்படி, கொரோனா வைரஸ் தாக்கத்தால் ரத்த நாளங்களில் ஆங்காங்கே ரத்தம் உறைந்து விடுகிறது. ரத்தம் உறைவதால் உடம்பில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். உள் காது தான் செவித்திறனுக்கு முக்கியமான பகுதியாகும். அந்த பகுதி ரத்த நாளங்களில் ரத்தம் உறைந்தால் செவித் திறன் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு ரத்தம் உறைவதை தடுக்கும் மருந்துகள் சிலருக்கு வழங்கப்படும். மருத்துவரின் உரிய ஆலோசனையுடன் இந்த மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், செவி திறன் பாதிப்பே சிலருக்கு கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி நிறுவன மருத்துவர் சுதா மகேஸ்வரி எச்சரித்துள்ளார். லேசான அறிகுறிகள் முதல் தீவிர அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட எவருக்கும் காது கேளாமை ஏற்படலாம். எந்த வயது பிரிவினருக்கும் இது ஏற்படலாம். உள் காது பாதிக்கப்படும் போது தீவிர தலை சுற்றல் ஏற்படலாம். எனவே தலை சுற்றல், லேசான காது கேளாமை இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என மகேஸ்வரி வலியுறுத்துகிறார்.