கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 750 பில்லியன் யூரோ மதிப்பிலான நிதி தொகுப்பிற்கு ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய யூனியன் தலைமை அலுவலகத்தில், பட்ஜெட் மற்றும் பொருளாதார மீட்பு நிதி தொகுப்பு உள்ளிட்டவை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளின் தலைவர்கள் நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். கடந்த ஐந்து நாட்களாக நடந்த ஆலோசனைக்கு பின்னர், இறுதியாக, ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஒற்றை வரியில் ‘டீல்’ என ட்விட்டரில் பதிவிட்டார்.
கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி தொகுப்புடன், முன்னப்போதும் இல்லாத வகையில், அடுத்த 7 ஆண்டுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் தொகையாக 1.82 டிரில்லியன் யூரோக்கள் ஒதுக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனின் ஒப்புதல் குறித்து ‘ஐரோப்பாவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க தினம்’ என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் என பாராட்டு தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸ் உச்சி மாநாடு குறித்து டுவிட்டரில், பெல்ஜிய பிரதமர் சோஃபி வில்ம்ஸ், எதிர்காலத்திற்காக ஐரோப்பிய யூனியன் முன்னெப்போதும் இவ்வளவு முதலீடு செய்ய முடிவு செய்ததில்லை’ என பாராட்டி பதிவிட்டுள்ளார்.