அமெரிக்காவில் டிக்டாக் நிறுவனத்தின் செயல்பாடுகளை கையகப்படுத்த, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன செயலியான டிக்டாக்கிற்கு உலகிலேயே இந்தியாவில் தான் மிக அதிக பயனாளர்கள் இருந்தனர். சமீபத்தில் எல்லையில் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, தேசபாதுகாப்பு கருதி டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதைதொடர்ந்து, அமெரிக்காவும் தற்போது டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க தீவிரம் காட்டி வருகிறது. வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைக் சந்தித்த அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்படலாம். அதற்கான மாற்று திட்டங்களும் தங்களிடம் உள்ளது என தெரிவித்து உள்ளார்.
இந்த தகவலின் படி, அமெரிக்காவின் ஃபெடரல் ஊழியர்கள் சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை அரசு வழங்கிய சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவு அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது என கூறப்படுகிறது. பயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் தனது வணிக செயல்பாடுகளை உடனடியாக மாற்றும் திட்டத்தில் உள்ளது. எனவே இதை பயன்படுத்திக்கொண்டு டிக்டாக்கை அமெரிக்காவில் நிர்வகிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஈடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.