உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் கண்டுகொள்ளாமல் 2006-ம் ஆண்டு முதல் வடகொரியா அணுக்குண்டு சோதனைகளை நடத்தி வருகிறது. அத்துடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவி அவ்வப்போது பரிசோதித்து வருகிறது. இது உலக நாடுகளின் கண்டனங்களை பெற்று வருகிறது.
இதன் காரணமாக அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.
இந்த சோதனைகள் பத்தாது என்று அங்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக உணவுப்பொருட்கள் வினியோகச்சங்கிலி முறிக்கப்பட்டுள்ளது. இதனால் வட கொரியாவில் உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
தற்போதையை நிலைமையை வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன், 1990-களில் அங்கு நிலவிய பஞ்சத்துடன் ஒப்பிட்டுள்ளார். ‘ஆர்டியஸ் மார்ச்’ என்று அழைக்கப்பட்ட அந்த பஞ்சத்தில் லட்சக்கணக்கான வடகொரிய மக்கள் செத்து மடிந்தது வரலாற்றின் கரும்புள்ளியாக பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் பொதுமக்கள் குறைவாக சாப்பிட வேண்டும் என்று கிம் ஜாங் அன் சமீபத்தில் உத்தரவிட்டது, மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.
அங்கு குளிர்காலம் வருகிற நிலையில் இப்போதே மக்கள் பட்டினி கிடப்பதாகவும், பட்டினிச்சாவுகள் அங்கு அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வடகொரியாவில் இருந்து தென்கொரியாவுக்கு தப்பிச் சென்றுள்ள குடும்பங்கள், தங்கள் குடும்பத்தினர் வடகொரியாவில் பட்டினியால் தவிக்கின்றனர் என கூறி உள்ளனர்.
இந்நிலையில் வரக்கூடிய அறுவடை காலத்தை நம்பி வட கொரிய மக்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.