தேனி மாவட்டம் வருசாட்டில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக மூல வைகைக்கு நீர் வரத்து அதிகரிப்பதால் விவசாயப்பணிகள் துரிதமடைந்துவருகிறது
தமிழகத்தில் கடந்த 4 தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வருசநாட்டில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மூல வைகைக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இங்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் வைகை அணையின் நீர் மட்டமும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு நிகழும் பட்சத்தில் தேனி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஏற்படும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு, தும்மக்குண்டு, வாலிப்பாறை, சீல முத்தையாபுரம், வருசநாடு, தும்மக்குண்டு, வாலிப்பாறை, சீல முத்தையாபுரம், காந்திகிராமம் அரசரடி, வெள்ளிமலை, வட்டகாணல், உருட்டிமேடு, சிங்கராஜபுரம், வண்டியூர், வீரசின்னம்மாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள கண்மாய், குளங்களுக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது.
இதோடு மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும் மூல வைகை ஆற்றிலும் நீர்வரத்து காணப்படுகிறது. எனவே தற்போது பெய்துள்ள இந்த மழை, கொட்டைமுந்திரி, இலவம்பஞ்சு, எலுமிச்சை, வாழை தென்னை மரங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக தெரிவிக்கும் விவசாயிகள், மற்ற விவசாயப் பணிகளையும் தற்போது துரிதப்படுத்தி வருகின்றனர்.