மாணவர்களின் மருத்துவ கனவினை கலைக்கும் நீட் தேர்வு வேண்டாம் என தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலுள்ள மத்திய அரசின் அலுவலகங்களுக்கு முன்பாக இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
கிராமப்புற மற்றும் பின் தங்கிய மாணவர்களின் மருத்துவ கனவினை வேறோடு பிடுங்கி எடுக்கும் வழி தான் நீட் தேர்வு என அரசியல் கட்சித்தலைவர்கள் உள்பட சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நீட் தேர்வு வேண்டாம் என பல கட்ட போராட்டங்களும், எதிர்ப்புகளும் கிளம்பிய போதே, தமிழகத்தில் அனிதா,கோவையை சேர்ந்த மாணவிகள் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இங்கு அரங்கேறியுள்ளது. ஆனால் அதனை எல்லாம் மத்திய அரசு சற்றும் கண்டு கொள்ளாமல், பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நீட் நுழைவுத்தேர்வினை நடத்தி வருகிறது.
ஆனால் பல மாணவர்கள் இதில் பாதிக்கப்படுகிறார்கள் என தற்போதும் தொடர்ந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் தான் உள்ளது. இதற்கிடையில் தான் இந்தாண்டு கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நீட் தேர்வினை நடத்த வேண்டாம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்தனர். ஆனால் திட்டமிட்டபடி, செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அதற்கான ஹால் டிக்கெட்டையும் மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தான் தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்துவரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலுள்ள மத்திய அரசின் அலுவலகங்களுக்கு முன்பாக இன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.