கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல், நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக உருவாக்கியுள்ள திரைப்படம், ‘ஜெய் பீம்’. இதில் ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பல திரைநட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் ‘2D என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படம் இருளர் இன பழங்குடி மக்களைப் பற்றிய உண்மை சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பழங்குடி இருளர் சமுதாய மக்களுக்கு இருக்கின்ற முதன்மையான பிரச்சினையே சாதி சான்றிதழ் பெறுவதுதான். மேலும் சாதி சான்றிதழ் இல்லாமல், பழங்குடியின மாணவர்கள் அவர்களது மேற்படிப்பைத் தொடர முடியாமல் பாதியிலேயே இடைநிறுத்தி விடுகின்ற அவலம் தொடர்கிறது. அத்துடன் அவர்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள், அவர்களுக்கான சட்டப் பாதுகாப்புகள் என்ன என்பதை திரைக்கதையில் சொல்வதே ‘ஜெய் பீம்’ படத்தின் கதை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா இந்தப் படத்தில் பழங்குடி இருளர் சமுதாய மக்களின் வாழ்வுரிமைக்காக போராடும் வழக்கறிஞராக நடித்துள்ளார். இருளர் சமுதாயம் உள்ளிட்ட பழங்குடியின மக்களின் ஆழமான அரசியல் பேசும், 164.4 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘ஜெய் பீம்’ படத்துக்குத் தணிக்கைத் துறையால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் மாதம் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இது சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.