காதநாயகிகள் வெறும் பாடல் காட்சிகளுக்கும், ரொமான்ஸ் காட்சிகளுக்கும் மட்டுமே என இருக்கும் ஸ்டிரீயோடைப்பினை அன்றைய காலகட்டத்திலேயே சில கதாநாயகிகள் உடைத்தெறிந்து இருக்கிறார்கள்.

அன்றைய காலகட்டத்திலேயே பாலச்சந்தர், ஸ்ரீதர், மஹேந்திரன், பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் தங்கள் கதாநாயகிகளை கதையின் நாயகர்களாக காட்டினார்கள். நாயகியின் கையில் திரைப்படத்தை கொடுத்து அழகு பார்த்தார்கள். இவர்களின் நாயகிகள் கதவிற்கு பின் நின்று கதாநாயகர்களை கண்டு வெட்கப்படவில்லை, காலையில் எழுந்து வீட்டு வேலை செய்து கணவனின் கால்களை தொட்டு வணங்கவில்லை, அதற்கு மாறாக தங்கள் குடும்பங்களை தாங்கினார்கள், வேலைக்கு சென்றார்கள், தீர்க்கமான முடிவுகளை எடுத்தார்கள், அசாதாரமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள், வில்லன்களை பறந்து அடிக்கும் ஹீரோக்களின் பின் ஒளிந்து நிற்காமல் தைரியத்துடன் வாழ்க்கையில் போராடினார்கள், பார்த்த பார்வையில் காதல் கொண்டு மரத்தை சுற்றி டூயட் பாடவில்லை, காதலையும் புதுமையாகவே செய்தார்கள்.

அரங்கேற்றம்:
பிராமண குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் தன் குடும்ப பாரத்தை சமாளிக்க விபச்சாரி ஆவது போன்ற ஒரு கதை, 70களின் காலத்தில் இப்படி ஒரு கதையை எடுப்பது எப்படி சாத்தியமாயிற்று என்று யோசித்தால் இன்றும் சற்று வியப்பாகவே உள்ளது. பிள்ளைகள் பல கொண்ட குடும்பத்தில் மூத்த பெண்ணாக நாயகி பரிமளா சந்தர்ப்ப சூழ்நிலையால் வழி மாறி போனாலும் அதன் மூலம் தன் குடும்பத்தை தூக்கி நிறுத்துவார் ஒரு கட்டத்தில் வீட்டிற்கு இந்த உண்மை தெரிய வர அவளால் வளர்க்கப்பட்டவர்களே அவளை தூக்கி எறிவது போன்று அமைந்திருக்கும். இந்த திரைப்படத்தில் வரும் ‘மூத்தவள் நீ கொடுத்தாய் இளையவள் அரங்கேற்றம்’ என்ற ஒற்றை பாடலின் மூலம் மொத்த கதையையும் கூறி இருப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் விபச்சாரம் என்பதோ குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண் அதில் ஈடுபடுவது போன்ற கதை எழுதுவதோ எந்த எதிர்ப்பும் இன்றி சிலரால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது சந்தேகமே இதை அந்த காலத்திலேயே செய்ய பாலச்சந்தரால் மட்டுமே முடியும்.

அவள் ஒரு தொடர்கதை:
ஒரு பெண்ணின் வாழ்க்கையை பல அத்தியாயங்களாக கூறியது அவள் ஒரு தொடர்கதை திரைப்படம். குடும்ப பாரம் தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறிய அப்பா, பொறுப்பில்லாத அண்ணன் இந்த குடும்பத்தை தாங்கும் கதாபாத்திரமாக சுஜாதா. மிடுக்கான புடவை கட்டு, நேர்த்தியான அலங்காரம், நெருப்பான பார்வை கட்டுக்கோப்பாக வாழும் கேரக்டர். குடும்பத்திற்காக உழைத்தாலும் அந்த குடும்பத்துடன் ஒட்டி வாழாமல் தன்னை தனியாகவே ஒதுக்கி வைத்து கொள்வாள். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அவளை வெறும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாகவே பார்ப்பார்கள். தன்னை கல்லாக காட்டி கொண்டாலும் அவளுக்குள்ளும் ஒரு காதல், வீட்டில் கணவனை இழந்து இளம் விதவையாக வாழும் தங்கைக்காக தன் காதலை விட்டு கொடுக்கும் நேரத்தில் அவளின் இறுகிய இதயமும் கண்ணீர் வடிக்கும். தானும் ஒரு குடும்ப பெண்ணாக சாதாரணாமாக வாழ வேண்டும் என்ற அவளது ஏக்கம் முடியாத தொடர்கதையாகவே இருந்து விடும்.

மூன்று முடிச்சு:
கமல் ரஜினி ஸ்ரீதேவிக்கான முக்கோண காதல் கதை. கமலை காதலிக்கும் ஸ்ரீதேவி, ஸ்ரீதேவியை காதலிக்கும் ரஜினி, தான் காதலிக்கும் பெண்ணின் காதலனை கொன்றுவிட்டால் அவளை அடைந்து விடலாம் என்ற ஆணின் மூர்க்க குணமுடைய ஆணை அடக்கி ஆளும் ஸ்ரீதேவியின் கேரக்டர். தன்னை அடைய தன் காதலனை கொன்றவனின் தந்தையை திருமணம் செய்து அவனை சித்தி என்று அழைக்க வைப்பது எத்தனை தைரியம் அந்த பெண்ணுக்குள்!

அச்சமில்லை அச்சமில்லை:
அரசியல் களத்தை சற்று வித்தியாசமாக கூறிய படம் அச்சமில்லை அச்சமில்லை. சுதந்திர போராட்ட வீரரின் மகளாக சரிதா, தான் உயிராக நேசித்த காதலனை திருமணம் செய்து அவனுடன் அழகான வாழ்க்கை, ஆனால் அரசியல் வாழ்க்கைக்காக அவன் தன் இயல்பு குணத்திலிருந்து விலகி ஒரு அரசியல்வாதியாக மாறும் பொழுது அவனை தைரியமாக எதிர்த்து நிற்பது, அவனால் அந்த கிராமத்திற்கு வர போகும் ஆபத்தை அறிந்து தான் காதலித்த கணவனையே கொல்வது! எத்தனை பெண்களால் இவ்வளவு தைரியமான முடிவை எடுக்க முடியும்? கணவனாக இருந்தாலும் தப்பானவன் என்றால் அவனை எதிர்ப்பது தவறில்லை என்று எடுத்துரைத்த நாயகி.

சிந்து பைரவி:
வழக்கமான காதல் கதையிலிருந்து சற்று விலகி, திருமணம் ஆன ஒரு ஆணுடன் காதல் சிந்துவின் காதல். இசையால் இணையும் இதயங்கள் தன்னை மீறி அந்த ஆணின் மீது காதல் வயப்படும் பெண் தான் காதலித்த ஒருவனை திருமணம் என்ற மரபிற்காக விட்டு விலகும் அளவுக்கான தைரியம் தான் காதலித்த ஒருவனை தைரியமாக விலகி செல்லும் தைரியம் அசாத்தியமான ஒன்றே. சிந்து இப்படியான கேரக்டர் என்றால் பைரவி சற்றும் சளைத்தவள் இல்லை. தன் கணவனை அவன் விருப்பத்திற்காக அவன் காதலித்த பெண்ணை பெண்ணை திருமணம் செய்து கொள்ள சொல்வது ஒன்றும் சாதாரணமான விஷயம் இல்லை.
60, 70 காலகட்டத்திலேயே நம் நாயகிகள் பெண்ணியம் பேசி விட்டார்கள். இன்றைய கதாநாயகிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? விளம்பர மாடலாக படத்தில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். இயந்திர மனிதனான சிட்டிக்கும் காதல் செய்ய நிலா என்னும் இயந்திர பொம்மை தேவைப்படுகிறதா? கண்டதும் காதல், நான்கு பாடல்கள், சில நெருக்கமான காட்சிகள் அவ்வளவு தான் நம் நாயகிகளின் வேலையா?
‘அரகேற்றம்’ லலிதாவும் ‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதாவும் தங்கள் குடும்ப பாரங்களையே 70 களில் சுமந்த போது நம் 20 களின் நாயகிகள் இன்னும் சாலையை கடக்க தெரியாத முயல்குட்டிகளாக காட்சிப்படுத்திக்கொண்டிருப்பது சரிதானா?




