இசை உலகின் ஜாம்பவானாக வாழ்ந்த, இசை ரசிகர்களின் நெஞ்சில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மைகேல் ஜாக்சன் பிறந்த தினம் இன்று.

ஆப்ரிக்க அமெரிக்க பாப் இசைப்பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர் என பன்முகங்கொண்ட மைக்கேல் ஜோசப் ஜாக்சன் என்னும் இயற்பெயருடைய மைக்கேல் ஜாக்சன் 1958 ஆண்டு ஆகஸ்ட் 29 தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்ட்டர் மற்றும் கேத்தரின் எஸ்தர் தம்பதிக்கு எட்டாவது குழந்தையாக பிறந்தார்.

1964 ல் தனது நான்கு சகோதரர்களுடன் ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்தார். பின் 1971 ல் தனியாக பாட துவங்கி புகழின் உச்சிக்கு சென்றார். 1982 ல் வெளிவந்த இவரது திரில்லர் ஆல்பம் உலகமெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆல்பத்தில் அவர் இனவெறிக்கு எதிரான கருத்துக்களை பேசியிருந்தார். இந்த ஆல்பத்திற்காக எட்டு கிராமி விருதுகளும் வழங்கப்பட்டது. பின்னாளில் இவர் MJ என்றும் இசை உலகின் மன்னன் என்றும் புகழப்பட்டார்.

பாடல் எழுதி, இசையமைத்து, அதற்க்கு ஏற்றார் போல் நடனம் ஆடி, இடை இடையே நடனமாடி புதுவகையான பாப் ஆல்பங்களை உருவாக்கினார். இவர் படைத்த ரோபோட், மூன்வாக் போன்ற நடன அசைவுகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது.

இசை உலகின் மாமன்னனாக வாழ்ந்த MJ என்னும் மைக்கேல் ஜாக்சன் 2009 ஆம் வருடம் ஜூன் 25 ஆம் தேதி தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

‘கிங் ஆப் தி மியூசிக்’ என்று ரசிகர்களால் போற்றப்பட்ட மைக்கேல் ஜாக்சன் இம்மண்ணுலகை விட்டு பிரிந்தாலும் இசையாக என்றென்றும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். இசை உள்ளவரை மைக்கேல் ஜாக்சன் இசை உலகின் இதயமாக துடித்து கொண்டு தான் இருப்பார்.
இசையின் நாயகனுக்கு செய்தி அலையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.




