– வேலூர் வெ. இராம்குமார்
அதிகாலை மணி ஐந்து….
தன் குடிசைக்குள் இருந்து வெளியே வந்தவளின் கைகளில் வாளி நிறைய தண்ணீர், துடைப்பம், கோலமாவு சகிதமாக வெளிப்பட்டாள், சுகந்தி.
துடைப்பத்தை கையில் எடுத்தவள், பக்கத்து குடிசையைப் பார்த்தாள். வீட்டு முற்றம் பெருக்கப்படாமலும், தண்ணீர் தெளித்துக் கோலமிடாமல், சுமங்கலிப் பெண் தலையில் பூ இல்லாதது போல, அமங்கலமாக இருந்தது. யோசித்தாள்.. “இந்த கிழவிக்கு என்னாச்சு? வழக்கமா, எனக்கு முன்னாடியே எழுந்து வீட்டு முற்றத்தை தெளித்து, குப்பைகளை எல்லாம் என் குடிசைக்கு முன்னாடி தள்ளி, எங்கிட்டே வாங்கிக் கட்டிக்கும். நேற்றும், இன்னைக்கும் குடிசையை விட்டு வெளியே தலைகாட்டலையே..
ஒருவேளை இந்த கொரோனா வந்து செத்துக் கித்து போயிடுச்சா.. என்ன இருந்தாலும், போய் பார்த்து முடிவு பண்ணிடலாம்… என எண்ணியவளின் மனதுக்குள், கோமதி கிழவியைப் பற்றி ஒரு சிறு போராட்டமே நடக்க ஆரம்பித்தது.
கோமதி கிழவியோட பூர்வீகமே, இந்த பண்டாரப்பட்டி கிராமம் தான். இளம் வயதிலேயே கணவனை இழந்தவள். ஒரே மகள். அவளும், குடும்பத்துடன் பட்டணத்தில் இருக்கிறாள். ஊரில் கோமதி கிழவியோட பட்டப்பெயரே, சண்டைக்கார கிழவிதான். அவளுடைய வாய் எப்போதுமே சும்மா இருக்காது. யாரையாவது திட்டி கொண்டோ, அல்லது யாரிடமாவது சண்டைப் போட்டபடியே இருக்கும்.
கிராமத்தில் இருக்கற குழந்தைகள் முதல் இளைஞர்கள், முதியவர்கள் வரை அவளிடம் பேச்சு கொடுப்பதுமில்லை. அவள் இருக்கும் திசையை எட்டிப் பார்ப்பதுமில்லை. மகள், வயதான தாயை பட்டணத்தில் தன்னுடனேயே இருக்கச்சொல்லி பலமுறை அழைத்தும் கூட செல்லாதவள், கோமதி.
அறுபது வயதுக்கு மேல் ஆனாலும், ரேஷன் கடையில் கிடைக்கும் உணவுப் பொருட்கள், தனது தோட்டத்தில் கிடைக்கும் காய்கறி, பழங்களை வைத்து சாப்பிடுபவள். சும்மாவாச்சும் சிவனேன்னு இருப்பாளே தவிர, கடனுக்காக எவரிடமும் கையேந்தாத பிடிவாதக்காரி. அவளின் பலம் மட்டுமல்ல… ஆயுதமே கோபமும், கோபத்தில் வரும் வார்த்தைகளும் தான்..
கோமதியின் பக்கத்து குடிசைவீட்டில் இருப்பவள்தான், சுகந்தி. தாய்-தந்தை இல்லாதவள். பண்டாரப்பட்டி, இவள் புகுந்தகமாக வந்த ஊர். கணவன் இந்திய இராணுவத்தில் பணிபுரிகிறான். குழந்தை இல்லாதவள். கோமதி கிழவிக்கு நிகரான வாயாடி; சரியான ராங்கிக்காரி. இப்படித்தான் இவளை ஊரில் அனைவருமே அழைப்பார்கள். அதுமட்டுமல்ல, கோமதி கிழவியோடு மல்லுக்கட்ட, சுகந்திதான் சரியான ஆள் என்பார்கள். இவர்கள் போடும் சண்டையை பார்க்கவே ஊர்க்காரர்கள் காத்திருப்பார்கள்.
அதிகாலையில் முற்றத்தைப் பெருக்கி, கோலமிடப்போகும் சமயம் தொடங்கும் சண்டை, இரவு ஊர் அடங்கும் வரை தொடரும். இருவருக்குள்ளும் இதுவரை சகஜமான பேச்சு பழக்கமோ, கொடுத்து வாங்கலோ, அரட்டைக் கச்சேரியோ இருந்ததில்லை. ஆனாலும், இருவருக்குள்ளும் ஒரேயொரு ஆச்சரியமான மறைமுகமான ஒற்றுமை மட்டும் உண்டு. இருவரும் ஊர்காரர்கள் முன்னாடி சண்டை போட்டாலும், தனிப்பட்ட முறையில் ஒருவரையொருவர் விட்டுக் கொடுப்பதில்லை. அது விட்டக்குறையோ, தொட்டக்குறையோ என்றுதான் தெரியவில்லை.
கிழவியைப் பற்றியும், தன்னைப் பற்றியும், தனது எண்ணக் கேமிராவை சுழலவிட்டவள், சகஜநிலைக்கு வந்தாள். பின், வர்றது வரட்டும் பார்த்துக்கலாம்… என்ற அசட்டு துணிச்சலுடன் சென்று, கிழவி வீட்டு குடிசையை தட்டினாள்.
“கிழவி..கிழவி.”
உள்ளேயிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. இப்போது கொஞ்சம் பதட்டமானவள், குடிசைக்கு வலதுபுறமிருந்த ஜன்னலை நோக்கி ஒடிப்போய் எட்டிப்பார்த்தாள்.
உள்ளே கிழவி, படுக்கையில் காய்ச்சலில் நடு நடுங்கிக் கொண்டிருந்தாள்.. பிதற்றியபடியே. வீட்டுக்கதவுக்கு முன் வந்தவள், மரக்கதவை தனது முழு பலங்கொண்டு எட்டி உதைத்தாள். கதவு கீழே விழுந்தது.
உள்ளே கோமதியின் அருகே சென்றவள், அவளைப் பார்த்தாள். கண்கள் சொருகிய நிலையில் இருந்தது. உடல் நடுக்த்தில் தூக்கிவாரிப்போட்டது. கை வைத்துப் பார்த்தாள். உடல் கொதித்தது.
“இந்த வயசுல உனக்கு அப்படி என்ன வறட்டு கௌரவம்? உடம்பு சரியில்லை கொஞ்சம் உதவி செய்ன்னு என்னை கூப்பிட வேண்டியதுதானே.. நானென்ன செத்தா போயிட்டேன்., குத்துக் கல்லாட்டம்தானே இருக்கேன்.”
“கோமதியால் பேச முடியலை. மாறாக, அவள் கண்களில் இருந்து கண்ணீரே பதிலாக வந்தது.”
“சரி..சரி..அழாதே! என் ஆத்தாவா இருந்தா பார்த்துக்கமாட்டேனா.. டாக்டர்கிட்டே போகலாமா?”
“வேண்டாம். என்னை கொரோனா நோயாளியாக்கிடுவாங்க” என சன்னமான குரலில் சொன்னாள்.
“இந்த வயசிலேயும், உயிர்மேல கிழவிக்கு ஆசையைப் பாரு.. படுத்தப் படுக்கையிலும் இந்த லொல்லு பேச்சுல மட்டும் உனக்கு குறைச்சலில்லை கிழவி. எனக்கு தெரிஞ்ச கைவைத்தியம் செய்யறேன்” என்றபடியே, அடுப்பைப் பற்ற வைத்து, தண்ணீரை சுட வைத்து நெற்றியில் பத்து போட்டாள்.
“நேற்றிலிருந்து எதாவது சாப்ட்டீயா கிழவி?
“இல்லை.”
“உடனே சமையலறையிலிருந்து அரிசியை எடுத்து, கஞ்சி செய்துக் கொடுத்தாள்.”
கஞ்சியை குடித்ததும், சற்று தெம்பு வந்ததாய் உணர்ந்தாள் கோமதி. ஆனாலும், உடலில் நடுக்கம் மட்டும் நிற்கவில்லை.
“கிழவி! உன் வீட்ல பிராந்தி இருக்கா?
கோமதி கோபமாகவும், ஆச்சரியமாகவும் சுகந்தியைப் பார்த்தாள்.
“கோவச்சுக்காதே கிழவி. இப்படி உடம்பு குளிர்ச்சியாகி, உதறலெடுத்தால், பிராந்தியை உடம்பு பூராவும் நல்லா அழுத்தி தேய்ச்சு, கொஞ்சம் குடிச்சாபோதும்….. உதறல் நின்னுடும்ன்னு என் புருஷன் சொல்லியிருக்காரே.”
முறைத்தாள்.
“சும்மா முறைக்காதே! சரி.. வீட்ல தலைவலி தைலம் ஏதாவது வெச்சிருக்கீயா?
தனது ட்ரங்க் பெட்டியைக் காட்டினாள்.
எழுந்துப்போய், பெட்டியை திறந்து தைலத்தை எடுத்து வந்தவள், கோமதியின் நெற்றி, கழுத்து, கை, உள்ளங்கால் வரை சூடு பறக்க தேய்த்தாள்.”
“போதும்..போதும்மா.”
“சரி!இனி நீ தூங்கு. நான் என் வீட்டு வேலைகளையெல்லாம் முடிச்சுட்டு வர்றேன். வேப்பிலை போட்டு ஆவி பிடிச்சுடலாம்.”
நன்றியுணர்வுடன் தலையாட்டினாள் கோமதி.
ஐந்தாவது நாள், அதிகாலையில்..
“ஏய் கிழவி! உடம்பு குணமாயிடுச்சுங்கற திமிரா.. மறுபடியும் உன் வீட்டுக் குப்பையெல்லாம் என் வீட்டு முற்றத்துக்கு தள்ள ஆரம்பிச்சுட்டே பார்த்தீயா?
“ஏய்! உன் வீட்டு குப்பையெல்லாம் என் வீட்டு முற்றத்துல கிடந்தா, பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றீயா.. அதான் தள்ளிவிட்டேன்.
“சுகந்தி வீட்டுக் குப்பையெல்லாம் என் வீட்டுக்கு ஏன் தள்ளிவிடறேன்னு, நீ காற்று கூடப்போய் சண்டை போடு. வீணா, எங்கிட்டே வராதே. அன்னைக்கு நான் மட்டும் உன்னை பார்த்து, காப்பாத்தலைன்னா, இந்நேரம் நீ மேலப் போய் சேர்ந்திருப்பே. அதை ஞாபகத்துல வெச்சுக்கோ.”
“ஏய்.. இது வைரம் பாஞ்ச கட்டைடி. நீ காப்பாத்தலைன்னாலும், என்னை நானே குணப்படுத்தியிருப்பேண்டி.”
“கிழிச்சிருப்பே. நீ நாலு நாளா, வாயைப் பொளந்துட்டுக் கிடந்த லட்சணத்தைதான் நான் பார்த்தேன்ல்லே..”
“நானாடி உன்னைக் கூப்பிட்டு உதவி கேட்டேன். நீயாத்தானேடி என்னை தேடி வந்தே.”
இருவரது வாய்ச்சண்டையும் உச்சத்தை அடைந்துக் கொண்டிருந்த வேளையில்.. கோமதியின் வீட்டு வாசலுக்கு முன் கார் வந்து நின்றது. இருவரும் சண்டையை நிறுத்தினார்கள்.
காரிலிருந்து கோமதியின் மகள் வள்ளியும், மாப்பிள்ளை, பேரன்களும் வந்து இறங்கினார்கள். காரை விட்டு இறங்கியதுமே, தாயிடம் அழுகையுடன் ஒடி வந்த வள்ளி,
“அம்மா! உனக்கு இப்போ எப்படியிருக்கு?
“என் உடம்பு சரியில்லைன்னு எந்த சிறுக்கிடி சொன்னது?
“உனக்கு போன் பண்ணினப்ப, நீ எடுக்கலை.. சுகந்திதான் எடுத்தாள். அவள்தான் நீ படுத்த படுக்கையா இருக்கறதா சொன்னாள். அதான் பயந்துபோய் கிளம்பி வந்துட்டேன்மா.”
“சின்ன காய்ச்சலுக்கு லேசா கண் அசந்ததை இப்படித்தான், ஊர் பூரா டமரா போட்டு சொல்லுவீயா? என்றபடி மீண்டும் சுகந்தியிடம் சண்டைக்குப் போனாள் கோமதி.
“அய்யே.. பெத்தப் புள்ளை குடும்பத்தோட வந்திருக்குன்னு சந்தோஷப்படுவீயா கிழவி. நான் எங்கேயும் போகமாட்டேன். இங்கேத் தான் இருப்பேன். நம்ம சண்டையை அப்புறமா வெச்சுக்கலாம். முதல்ல வந்தப் புள்ள குடும்பத்தைப் போய் கவனி.”
“என்ன திமிரா பேசறாள்ன்னு பாரு வள்ளி.”
“விடும்மா! வா உள்ளே போகலாம். உங்க சண்டையை அப்புறமா வெச்சுக்கலாம்.
“அதுவும் சரிதான் என்றபடியே, தன் பேரக் குழந்தைகளை கொஞ்ச ஆரம்பித்தாள் வள்ளி.
“சுகந்தி!நாங்க கிளம்பறோம். அம்மாவை பத்திரமா பார்த்துக்கோ. உன்னை நம்பித்தான் விட்டுட்டு போறேன்.”
“வள்ளி! உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா. வயசான காலத்துல, அம்மாவை கூட்டிட்டுப் போய் உன்னோட வெச்சுக்க வேண்டியதுதானே.. கிழவியை இங்கே ஏன் தனியாவிட்டுட்டு போறே.”
“எவ்வளவோ வற்புறுத்தியும், எங்கக் கூட வரமாட்டேன்றாங்க சுகந்தி.”
“அது வேற ஒண்ணுமில்லை. உங்கூட வந்துட்டா, கிழவிக் கூட சண்டைபோட ஆள் இருக்காதுல்லே. அதான் பயப்படுது. அது வாயும், கையும் சும்மா இருக்காதே!
“என் வாயைப் பார்த்தா சொல்றே.. என் மகள் போனதும், உன் வாயை கிழிக்கறேன் பாரு, என்றாள் கோமதி.
“கொஞ்சம் பேசாம இரும்மா. சுகந்தி நல்ல பொண்ணு. அவளையாவது பகைச்சுக்காமல் இரு, எனக் கூறிவிட்டு கிளம்பினாள், வள்ளி தன் குடும்பத்தோடு.
மகள் போனத் திசையைப் பார்த்து கண்கலங்கியபடி நின்றாள் கோமதி.
“ஏன் கிழவி! புள்ள மேல இவ்வளவு பாசத்தை வெச்சிருக்கீயே. வயசான காலத்துல அவ கூட போய், கடைசிக்காலத்தை கழிக்காமல், இங்கேயிருந்து ஏன் ஊர்மக்களோட உசிரை வாங்கிட்டு இருக்கே?, கோமதியால் பேச முடியவில்லை.
“இந்த கிராமத்துலேயும், உன் குடிசையிலேயும் என்னப் புதையலைத்தான் வெச்சு இருக்கீயோ.. இப்படிக் கட்டிப் பாதுகாத்து அழுதிட்டிருக்கே. பெத்தப் புள்ளையை விடு. பேரப்பசங்கக் கூட இருந்து, கடைசிக் காலத்தை கழிக்கணும்ன்னு கூட உனக்கு தோணலையே. சரியான கல்நெஞ்சுக்கார கிழவி நீ. “கோபத்தில் திட்டினாள்.
“என் மகள் கூடயிருக்க எனக்கும் ஆசைதான்ம்மா.”
“பின்னே ஏன் போகலை கிழவி?
“உனக்காகத்தாம்மா!
அதிர்ந்தாள். எ…. என்னது…. எனக்காகவா, என்ன லூசு மாதிரி உளர்றே?
“உண்மையைத்தாம்மா சொல்றேன். நீ இங்கே வந்ததுலேயிருந்து, நாம மாமியார்-மருமகளாட்டம் சண்டை போட்டுட்டுத்தான் இருக்கோம். உன் மேலேயும் எனக்குப் பெருசா அக்கறை, பாசமில்லாமல் இருந்தாலும், உன் புருஷன் திவாகர் ராணுவத்துக்கு போகும்போது, எங்களுக்குன்னு துணை யாருமில்லைம்மா.. உங்களை என் அம்மாவா நினைச்சு கேட்டுக்கறேன். என் மனைவியை நான் வந்து, கூட அழைச்சுட்டு போகுற வரை, பத்திரமா பார்த்துக்கோங்கன்னு சொல்லி கேட்டுக்கிட்டான். உன்னைப் பார்த்துக்கறதா சொல்லி நானும் வாக்கு கொடுத்துட்டேன்.
பொம்பளை தனியா இருந்தா, அவளுடைய கற்புக்கும், நிம்மதியான வாழ்க்கைக்கும், உசிருக்கும் உத்திரவாதம் கிடையாதும்மா. பெண்கள் தனியா இருந்தாலே, சில ஆண்கள் மிருகமா மாறிடுவாங்கம்மா. அதற்கு பயந்துதான் வலுக்கட்டாயமா, கோபம்ங்கற ஆயுதத்தையே நான் துணைக்கு வெச்சிருக்கேன். உனக்குப் பாதுகாப்புக் கொடுக்கத்தான் நினைச்சேனே தவிர, ஒரு மகள் மாதிரி பழக நினைக்கணும்ன்னு எனக்கு தோணலை; ஆனால், உனக்குப் பாதுகாப்பு அரணா இருக்கனும்-னு மட்டும் தோணுது; இப்போ சொல்லு. உன் புருஷனுக்குக் கொடுத்த வாக்கை மீறி நான் கிளம்பவா?
கண்கலங்கிய சுகந்தி, இப்போது என்னை மன்னிச்சிடு கிழவி…… உண்மைத் தெரியாமல், உன்னை தப்பா நினைச்சு திட்டிட்டேன். “என கட்டியணைத்து அழுதாள்.
“உன் புருஷன் எங்கிட்டே மகன் மாதிரின்னு சொன்னான்; அவன் மகன்னா, நீ எனக்கு மருமகள் மாதிரி, அவன் உன்னைக் கூட்டிட்டுப் போகுறவரை, உங்கூட சண்டை போட்டுட்டும், திட்டிட்டும்தான் இருப்பேன் புரியுதா?”
“இனியும் நாம ஏன் பழைய மாதிரி சண்டைப் போடணும் கிழவி. அதான் நாம ராசியாயிட்டோமே?
“யார் கூடயாவது தினமும் சண்டை போடலைன்னா, எனக்குப் பொழுதும் போகாது… நிம்மதியாகவும் இருக்காதுடி…”
“உங்க சந்தோஷத்துக்காகவாவது, இனி நானும் உங்கக் கூட சண்டைப் போடறேன் அத்தே..”
“உன்னோடு மல்லுக்கட்ட நானும் ரெடி மருமகளே.” என, கோமதியும் இப்போது சிரித்தபடிக் கூறினாள்.
– கதைப் படிக்கலாம் – 38
இதையும் படியுங்கள் : தாய் மடி