இந்த வார்த்தையை உச்சரிக்காதவர்கள், கடக்காதவர்கள் இந்த மண்ணில் வாழ்வது வீண். ஏனெனில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் காதலித்திருக்க வேண்டும். அதில் வெற்றி பெறும் சுவாரஸ்யத்தைக் காட்டிலும் தோல்வி அடைந்திருக்க வேண்டும். தோல்வி அடையாத காதல் எல்லாம் ஒரு காதலா?
பால்ய வயது காதல், பள்ளிக் காதல், கல்லூரிக் காதல், பணியிடக் காதல் கண்டதும் காதல் என டைரிப்பக்கங்கள் எப்போதும் என்கேஜ்டாகவே இருந்திருக்கின்றன.
எனக்கு தெரிந்து என் இரண்டாம் வகுப்பு தேவி டீச்சர் மேல் தான் என் முதல் காதல் பூத்தது. தொட்டால் ஒட்டிக் கொள்ளும் சிவப்பு. ஒடிசலாய் நெடுநெடுவென இருப்பார்கள். காதோர முடிகள் சுருள் சுருளாய் கொடிகளைப் போல அவரைப் பற்றிப் படர்ந்திருக்கும். முடி அவ்வளவு அழகாய் இருக்கும். கால ஓட்டத்தில் எத்தனையோ முகங்களையும், பெயர்களையும் மறந்து விட்ட போதிலும் தேவி டீச்சரின் அம்முகம் சிறு கீறல் கூட விழாமல் அப்படியே நினைவுச் சித்திரத்தில் தங்கி இருக்கிறது.
கைகளுக்கு மருதாணி வைத்திருப்பார். பட்டுப்புடவை பார்டர் மாதிரி இருக்கும் அந்த விரல்கள்.
ஒருமுறை வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று சொல்லி என்னை வகுப்பு வெளியில் முட்டி போட சொன்ன போது என் முதல் காதல் தோல்வி ஏற்பட்டது. ஆனால் தேவி (டீச்சர்) மீது எனக்கு எந்தக்கோபமும் ஏற்படவில்லை.
சில விசயங்களில் ஏதோ வயதில் நாம் தங்கி விடுவோம். ஆனால் தேவியின் விசயத்தில் பூத்துக் குலுங்கும் காடாய் அவர் அப்படியே இருக்கிறார். நான் வளர்ந்து கொண்டே இருக்கிறேன். அந்த பூனைக்கண் சிரிப்பிற்காய் கவிதை கூட எழுதப் பழகிக் கொண்டிருக்கிறேன்.
இது தோல்வியடைந்த காதல் தான். ஆனால் இன்னமும் தேவியை நினைத்துக் கொண்டிருக்கிறேனே. அது தான் காதல் தோல்வியின் வெற்றி.
-சொற்கோ
கவிதையை சுவாசியுங்கள் : *இப்படி புன்னகைத்தால் என்ன தான் செய்வது?*