– எஸ்.லஷ்மிகாந்தன்
நான் மெதுவாக என் அறை ஜன்னலை திறக்கறேன். ஏ.சி. யை முன்பே நிறுத்தியிருந்தேன். ஜில் காத்து அப்படியே மூஞ்சில தெறிக்குது. இது மூணு ஏ.சி. காத்துக்குச் சமம். வானத்தில் பாதி நிலா, நிறைய நட்சத்திரங்கள். கருப்பு கலந்த மேகங்கள்.
ஜன்னல் கம்பியை தொட்டால் ஐஸ் மாதிரி இருக்கு. அந்த சிலிர்ப்பு நரம்புக்குள் படர்கிற மாதிரியே இருக்கு.
இன்னிக்கு என் வீட்டுக்காரர் இல்லை. ரெண்டு நாள் அலுவலகப் பயணமா சென்னைக்குச் சென்றுள்ளார். அவர் இருந்தா இந்த மாதிரி நடு ராத்திரில ஜன்னலை தெறந்து வச்சிகிட்டு நிலாவையும் குளிரையும் ரசிக்க முடியாது. இதென்ன வேடிக்கைனு சொல்லி வந்து படுன்னு கட்டளை போட்டுடுவார். மீற முடியாது.
எதை மீற முடியும்? மீறினால் என்ன ஆகும்? என் அழகை அதாவது மற்றவர்கள் எல்லோரும் சொல்கிற மாதிரி, என் அழகுக்காக நிறைய விட்டுக் கொடுத்தல்களை செய்து, நடுத்தர குடும்பத்து சுமைகளைத் தாங்கி வாழ்வு கொடுத்த கணவனின் வார்த்தைகளில் எதை மீற முடியும்?.
ரோட்டில் கூர்க்கா லொட் லொட்னு தட்டிக்கொண்டு போறான். சுதந்திரமா என்னைவிட சுதந்திரமா… எங்கேயோ தேசத்தில் இருந்து பாஷை தெரியாமல் பழக்கம் இல்லாமல், ஏதோ நம்பிக்கையில் வருஷத்திற்கான பணத்தைச் சேர்த்து, 1 மாதம் மட்டும் சொந்த ஊருக்குப் போய் சந்தோஷப்படும், அந்த கூர்க்காவின் சுதந்திரங்கள் கூட எனக்கு இல்லை.
இந்த கூர்க்கா என்னைப் பார்க்காமலேயே போறான். அது ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு. என் அழகையோ, உடம்மையோ ஒருத்தன் பார்க்காமா போனா, அது ஒருவிதமான திருப்தியா இருக்கு.
எந்தக் கண்களும் என்னோட தோலை, கை சரிவுகளை, இடுப்பை, முகத்தை வருடிச் செல்லவில்லை என்பதே ஒரு சந்தோஷமாய் இருக்கு. அதனாலேயே கூட இந்த இரவை பிடிச்சிருக்கு.
பகலில் தான் எத்தனை எத்தனைப் பார்வைகள்? நினைவு தெரிஞ்ச நாள் முதலாகவே, எத்தனை எத்தனை சீண்டல்கள். சும்மாவேணும் கன்னத்தை கிள்ளாமல் இருப்பதில்லை. பத்து பதினோரு வயது வரை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் தெளிந்து, தவிர்க்க ஆரம்பித்து, விலகி செல்ல முற்படுவதற்குள், எத்தனை போராட்டங்கள்? சுமாராக ஒரு ஐயாயிரம் கன்னக் கிள்ளள்களை சந்தித்திருப்பேனா?
எல்லோரும் நான் ஏதோ ரொம்ப அழகா இருக்கறதா சொல்றாங்க. எனக்கென்னவோ அது மாதிரியெல்லாம் தெரியலை. கண்ணாடியில் பார்க்கும்போது அதே ரெண்டு கண்கள், மூக்கு, முகம் இத்யாதி… இதில் தனியா அழகு எங்க இருக்கு? எனக்குப் புரியலை. என்னைப் பொறுத்தவரை அழகுக்கு அர்த்தங்கள் வேறே… நாலுபேர் முகம் கோணாமல் நடந்துக்கறது, உதவி பண்றது, நல்லவிதமா பேசறது……… இது மாதிரியெல்லாம் தான் அழகா தெரியுது எனக்கு.
அப்படி பார்க்கும் போது என் புருஷனே கூட அழகாக இல்லை தான். எப்பவும் ஏதோ ஒரு சந்தேகப் பார்வையாகவே என்னை பார்க்கற மாதிரி எனக்குத் தோணும். ஒரு வேளை எனக்குத் தான் அப்படி தோணுதான்னும் தெரியலை. எங்கப் போனாலும் ஒருவித அவசரம் காட்டுவார். அப்படி போகாதே, அதைப் பேச வேண்டாம் என்கிற கட்டளைகள் கண்களாளேயே பிறக்கும். தடால்னு ஒரு சத்தம் கேட்டது. தோட்டத்துப் பக்கம் பெருச்சாளி எதையே உருட்டி இருக்கும் போலே. பகல்ல இந்த பெருச்சாளிகள் எல்லாம் கண்ணிலே சிக்கறதே இல்லையே…. ஏன்னு தெரியலை. ஒருவேளை அது மனசுக்குள் அது அழகா இல்லைன்னு நினைப்போ என்னவோ…
ஆனா நான் நிறைய ஆம்பளை பெருச்சாளிகளை பகல்லேயே பார்த்திருக்கேன். பால்காரன் கையை இழுத்து வச்சி பால் கொஞ்சம் சேர்த்து ஊத்தறதும், காலேஜ் போகும்போது பஸ் கண்டக்டர் டிக்கெட்டை அழுத்திக் கொடுக்கறதும், நிக்கும்போது முன்னேயும், பின்னேயும் உரச முயற்சி பண்றதும், வண்டியில் வர்றவன் பக்கத்திலே வந்து வழியறதும், ஆசிரியர்களே தனியா கூப்பிட்டு ஸ்கூல்லயும், காலேஜ்லயும் ஸ்பெஷலா அக்கறை இருக்கறமாதிரி காட்டிக்கொண்டு பேசறதும், ஐஸ்கீரிம் பார்லர், புத்தகக்கடை, ஓட்டல், துணிக்கடை என எங்கேப் போனாலும் என்னைத் தொடர்ந்து வரும் பெருச்சாளிப் பார்வைகளை தவிர்க்கவே முடியலையே……. ஏன்னு தெரியலை.
இதுல என்ன வேடிக்கைன்னா ஒரு சில ஆண்ட்டிகள் கூட ரொம்பவும் கொஞ்சி, கொஞ்சி பேசுவாங்க… தேவையில்லாம தொட்டு தொட்டு பேசுவாங்க… சகிச்சிக்க முடியாது.
இன்னமும் தூக்கம் வரமாட்டேங்குது. தூரத்தில ஏதோ சில நாய்கள் மாத்தி மாத்தி குரைக்கறதும், ஊளையிடறதும் கேக்குது. இதமான குளிர்காத்து, மனசை மிதக்கற மாதிரி பண்ணுது.
தூரத்தில் ஏதோ வண்டியோட ஹார்ன் சத்தம் கேட்குது. பால் வண்டியாவோ, பேப்பர் வண்டியாவோ இருக்கும்.
எனக்குப் பால் வாங்கறதுக்கும், வாசல் தெளிச்சுக் கோலம் போடறதுக்கும் ரொம்ப ஆசையா இருக்கும். ஆனா இதுவரைக்கும் நிறைவேறினதே இல்லை. ‘வயசு பொண்ணு வெளியே போகாதடி’ன்னு அம்மா அப்பாவில் இருந்து ஆரம்பித்து, இந்த வயசு வரைக்கும் தொடர்ந்து வந்துக்கிட்டு இருக்கு. என் அழகு எனக்கு எதிரி.
ஆனா கிளிமாதிரி இருக்கா எம் பொண்ணு அப்படீன்னு சொல்லி சொல்லியே, கல்யாண மார்க்கெட்ல என்னைத் தள்ளி விட்டாங்க. அழகுக்காகவே வந்தது பல வரன்கள். ஜாதகங்கள். கடைசியாய் தான் இது அமைந்தது.
என் அழகுக்கு எதுதான் வரவில்லை? எதெது என் மனசுக்கு பிடிக்காதோ அதெல்லாம் தானாவரும். இந்தப் புடவை உங்களுக்குன்னு இருக்கு அப்படிங்கறதலிருந்து ஆரம்பிச்சு……. வரைக்கும் உலகமே எனக்காக வலைவிரிச்சி காத்துக்கிடக்கு. ஆனா இதெல்லாம் வெறும் மாயையாகத்தான் எனக்குப் படுது.
என் மனசுக்கேத்த மாதிரி எதுவும் கிடைக்கறது இல்லை. எனக்குப் பிடிச்ச அசோகமித்ரன் பத்தியும் ஆதவன் பத்தியும், யார்கிட்டேயும் பேச முடியலை. மழையில நனைய முடியலை. வாசல்ல டிசைன் டிசைனா கோலம் கூட போட முடியலை. சொல்லப்போனா ஃபேஸ்புக்குல பிடிச்சப் பதிவுகளுக்கு லைக்கூட போட முடியலை.
இன்னைக்கும் வாட்ஸ்அப் ஃபேஸ்புக்ல நான் தொடர்ந்து இல்லை. ஆரம்பிச்சதோட சரி, அதைவிட இருக்க விடலை. காரணம் என் அழகு பாழாய் போன அழகு.
பள்ளிக்கூட காலத்தில இருந்து பின்தொடர்ந்து வந்து, கண்ணே மணியேன்னு சொல்லி காதல் கடிதம் கொடுத்தவர்களையும், அழகுராணி, இதய தெய்வம்னு, போலித்தனமா பேசினவங்களையும், நீ ஓ.கே. சொல்லலைன்னா உடனே தற்கொலை தான்னு சொன்னவங்களையும், மொக்கையாவும், தட்டையாகவும் கவிதை எழுதி தந்தவர்களையும், நாளைக்கு காலையில நான் செத்துட்டதா பேப்பர்ல நியூஸ் வரும்னு புருடா விட்டவங்களையும், இப்ப நினைச்சாக்கூட சிரிப்பாய் வருது. அந்தச் சமயத்தில பாவம்னு கூட தோணிச்சு.
அப்பப்பா…… எத்தனை விதமான பார்வைகள். வெறும் பார்வையிலேயே காமத்தை வைச்சுக்கிட்டு, ஒரு அழகான பொண்ணு எப்ப வேணா, எதுக்குவேணா தயாரா இருப்பாங்கற நெனைப்போடயே பல ஆண்களை கடக்க வேண்டியதா இருக்கு.
இதுக்குச் சின்னவனா, பெரியவனா… வயசானவன், வயசில்லாதவன்… படிச்சவன், படிக்காதவன்… வித்யாசம் எல்லாம் இல்லை. யாருமே ஒரு சக மனுஷியா அல்லது தோழியா கூட நெனைக்காமத்தான் இருக்காங்க. வக்கிர பார்வையுடையவர்கள் தான் நிறைய. அதுலேயே என்னை கொலையே செய்யுற மாதிரி இருக்கு. ஆனாலும் ஒரு பொண்ணா இதையெல்லாம் சகிக்சுக்க வேண்டிதான் இருக்கு. ஏதோ ஒரு பயம் வேறே மனசுக்குள்ள இருந்துக்கிட்டே இருக்கு.
இந்த மோசமான பார்வைகளால் என்னால என் ஃப்ரெண்ட்ஸ் கிட்டே கூட சகஜமாக, மனசார பேச முடியாம போயிருக்கு. ஷாப்பிங் போக முடியாது. சினிமா போஸ்டரை கூட நிமிர்ந்து ரெண்டு செகண்ட் பார்க்க முடியாது.
சாயங்கால வானத்தில் வீடுதிரும்புற காகங்களை மொட்டை மாடியில பார்க்க முடியாது. இப்படி எத்தனையோ சின்ன சின்ன சந்தோஷங்கள் கூட எனக்கு கிடைக்கறது இல்லை.
எப்பவுமே ஒரு தவிப்பு, ஒரு படபடப்பு, ஒரு ஏக்கம் இருந்துக்கிட்டே இருக்கு. எல்லோருக்கும் இப்படி இருக்குமா? அல்லது அழகானவளா நினைக்கறதுனால இப்படி இருக்கும்…
இந்த மாதிரி குழப்பங்கள் எப்பவுமே எனக்கு தீராதுன்னு தெரிகிறது. பள்ளிக்கூடம் முடிச்சா சரியாய்டும், காலேஜ் போனா சரியாய்டும், வேலைக்குப் போனா சரியாய்டும், கல்யாணம் பண்ணா சரியாய்டும்னு, நெனச்சுக்கறது தான். ஆனா தீர்வே இல்லாமல் தொடர்ந்து வந்துக்கிட்டு தான் இருக்கு. மரணம் வரும்போதுதான் தீருமான்னும் தெரியலை…
காத்து இன்னும் நல்லா வீசுது. நிலா தன்னோட பாதையில் இருந்து விலகி இருக்கறது நல்லா தெரியுது. தூக்கமும் வரலை. நின்னுக்கிட்டே இருந்ததால கால் வலி, போய் படுத்துக்கலாம்னும் தோணுது. படுத்துக்கிட்டாலும் யோசனை வராமயா போய்டும்.
நான் மெதுவா என் அறை ஜன்னலை சாத்தறேன்.
– கதைப் படிக்கலாம் – 156