இதுதொடர்பா, வி.சி.க. தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
துணைவேந்தர் சூரப்பா
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராகப் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில் தற்போது தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது.
சூரப்பாவின் காலத்தில் பல்கலைக்கழகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அண்ணா பல்கலைக்கழகச் சட்டத்திற்கு உட்பட்டவையாக உள்ளனவா? அவர் காலத்தில் தற்காலிக நியமனங்கள் முறையாகச் செய்யப்பட்டனவா? பல்கலைக்கழகத்தால் வசூலிக்கப்பட்ட கட்டணம், நன்கொடை , நிதி நல்கை போன்றவை சரியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளனவா? உள்ளிட்டவற்றை நீதிபதி கலையரசன் ஆணையம் விசாரிக்கும் என்று தமிழக அரசின் அரசாணை தெரிவிக்கிறது.
இடைநீக்கம்
நிர்வாகக் குளறுபடிகள் மட்டுமன்றி, நிதி முறைகேடுகள் தொடர்பான புகார்களும் துணைவேந்தர் சூரப்பா மீது தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பது விசாரணைக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும். எனவே, விசாரணை ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர் தாமே முன்வந்து பதவி விலக வேண்டும் அல்லது அவரை உடனடியாக இடைநீக்கம் செய்வதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.