100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாறு படைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியா உட்பட பல நாடுகளை ஆட்டிபடைத்த கொரோனா தொற்றுக்கு எதிராக அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப் படுத்தப்பட்டுள்ளது. எந்தளவுக்கு தடுப்பூசி செலுத்துகிறமோ, அந்தளவு கொரோனாவின் மூன்றாவது அலையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தனர்.
ஜனவரி மாதமே இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசி செலுத்திக் கொள்வோர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது.
ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கு ஏற்ற யுக்தியை பயன்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அதில் வெற்றியும் கண்டன. அந்த வகையில், தமிழ்நாட்டில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி மூலம் அதிகளவிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 9 மாதங்களில்(278 நாட்களில்) 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே சீனா முதல் நாடாக 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ள நிலையில், இந்தியா 100 கோடி தடுப்பூசியை செலுத்தி இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. காலை 7.30 மணி நிலவரப்படி 99.85 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த நிலையில், காலை 10 மணி நிலவரப்படி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,04,80,500ஐ கடந்துள்ளது. இந்த தகவல் கோவின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, நிதி ஆயோக் சுகாதாரத் துறை உறுப்பினர் வி.கே.பால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், “100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாறு படைத்திருக்கிறது.
இந்தியாவின் அறிவியல், தொழில் மற்றும் 130 கோடி இந்திய மக்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியை நாம் கண்கூடாக காண்கிறோம். வாழ்த்துகள் இந்தியா. 100 கோடி தடுப்பூசி செலுத்திவிட்டோம். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இந்த சாதனையை அடைய காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை, 70,83,88,485 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 29,18,32,226 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளனர்.
இதில் 18-44 வயதிற்கு உட்பட்டோர் 46,46,62,265 பேர், 45 வயதிற்கு மேற்பட்டோர் 30,36,43,267 பேர். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 12,21,60,335 பேரும், தமிழ்நாட்டில் 5,39,60,165 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது, #VaccineCentury என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.




