கனமழையால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
வான்வழியாக ஆய்வு செய்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக கடந்த ஐந்து தினங்களாக கொட்டி தீர்த்த கனமழையால் மாநிலத்தின் ஹரிதுவார் ,உத்தம்சிங் நகர், உத்தரகாசி ,ருத்ரபிரயாக், சமோலி, பித்தோராகார்க், பாகேஷ்வர், அல்மோரா, நய்னிதால், டேராடுன், பவ்ரி, சம்பாவத்,தெரி கர்வால் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக நதிகளில் வெள்ளம் அபாய அளவையும் தாண்டி சென்றது.
மற்றொரு பக்கம் மாநிலத்தின் 60 சதவீத சாலைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு அதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் பாலங்கள், ரயில் பாதைகள் ஆகியவை சேதமடைந்துள்ளது. உத்தரகாண்ட் மாநில அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி இதுவரை மாநிலத்தில் பெரு மழையின் காரணமாக 54 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரகண்ட் மாநிலம் சென்றிருந்தார். அங்கு உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் டமி மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதற்குப் பிறகு இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் உத்தரகண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை வான்வெளியா ஆய்வு செய்தார். அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் உத்தரகண்ட் முதலமைச்சர் புஸ்கர் சிங் டாமி மற்றும் உத்தரகாண்ட் மாநில ஆளுநர் குர்மீத் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.
வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சரிடம் மாநில முதலமைச்சர் விளக்கினார், மேலும் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு சார்பாக மாநில அரசுக்கு அனைத்து உதவிகள் வழங்கப்படும் எனவும் பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் முதலமைச்சரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.