இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா பதவியை ராஜினாமா செய்வதாக, தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளார். அதில், ஆகஸ்ட் 31ம் தேதி உடன் தன்னை தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து விடுவிக்கும்படி குறிப்பிட்டு உள்ளார்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக லவாசா கடந்த மாதம் நியமனம் செய்யப்பட்டதையடுத்து, தேர்தல் ஆணைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக தற்போது பொறுப்பில் இருக்கும் திவாகர் குப்தா, வரும் 31ம் தேதியுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அந்த பொறுப்பை ஏற்பதற்காக தேர்தல் ஆணையர் பதவியை லவாசா ராஜினாமா செய்துள்ளார்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவருக்கு கீழ், ஆறு துணைத் தலைவர்கள் அடங்கிய நிர்வாகக் குழு உள்ளது. துணைத் தலைவர் மூன்று வருட காலத்திற்கு நியமிக்கப்படுகிறார். தேவைப்பட்டால் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படும்.
லவாசாவின் இந்திய தேர்தல் ஆணைய பதவி நிறைவடைய இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அடுத்த மூத்த தேர்தல் ஆணையராக உள்ளார். லவாசா தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் பணியாற்றினால், அவர் தலைமைத் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கபட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த நாடளுமன்ற தேர்தலில், பாஜக கட்சி முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர் கூறிய கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.