திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 9 நாட்களாக நடை பெற்று வந்த பிரமோற்சவ திருவிழா, கொடி இறக்கத்துடன் நேற்று நிறைவு பெற்றது.
கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுடன் திருப்பதியில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருக்கின்றனர். இதனிடையே, ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும், புரட்டாசி மாத பிரம்மோற்சவம் இந்த முறை வழக்கமான கொண்டாட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஏதும் இன்றி எளிமையான முறையில் நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி கடந்த 19 ஆம் தேதி, கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரமோற்சவ விழா தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீதி உலாக்கள் ரத்து செய்யப்பட்டு கோயில் வளாகத்துக்குள்ளேயே, பிரம்மோற்சவத்தின் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன.
பிரமோற் சவத்தின் 9 நாட்களிலும் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந் தருளி அருள்பாலித்தார். அதன்படி, 5ம் நாளான 23ம் தேதி கருட வாகனத்தில் எம்பெருமான் எழுந்தருளினார்.
தொடர்ந்து, விழாவின் கடைசி நிகழ்ச்சியாக, கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தின் மேல் இருந்த கொடி இறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள்,கலந்து கொண்டு கொடியை இறக்கியதை அடுத்து, நடப்பாண்டிற்கான பிரம்மோற்சவ விழா நிறைவுபெற்றது.