பிரபல சமூக சேவகரான மருத்துவர் ஷீத்தல் ஆம்தே – கராஜ்கி, மகாராஷ்டிராவில் உள்ள ஆசிரமத்தில் இன்று தற்கொலை செய்துக்கொண்டார்.
மகசேசே விருது பெற்ற மறைந்த சமூக ஆர்வலரான பாபா ஆம்தேவின் பேத்தியும், பிரபல சமூக சேவகரான மருத்துவர் ஷீத்தல் ஆம்தே – கராஜ்கி, இன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திரப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்தவன ஆசிரமத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோத்தித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஷீத்தல் ஆம்தே தனக்குத் தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷீத்தல் ஆம்தே – கராஜ்கி, மஹரோகி சேவா சமிதியின் (தொழுநோய் சேவைகள் குழு) தலைமைச் செயல் அலுவலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷீத்தல் ஆம்தே தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக, இன்று அதிகாலையில் “போரும் அமைதியும்” என்ற தலைப்பில் அவர் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.