இந்தியா முழுவதிலும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை, செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று, யூ.ஜி.சி. சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில், தேர்வுகள் அனைத்து ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அறிவித்திருந்தது.
யு.ஜி.சி.-ன் இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, பல்வேறு மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும், இத்தேர்வுகளை நடத்த, யு.ஜி.சி.க்கு தடை எதுவுமில்லை எனவும் கூறியுள்ளது. மேலும், தேர்வு நடத்தப்பட்டால் மட்டுமே, மாணவர்கள் வேலைக்கு செல்வதில் எந்தவித சிக்கலும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தேர்வை நடத்தும் சூழல், தங்கள் மாநிலங்களில் தற்போது இல்லை என்றுக் கருதினால், தேர்வு நடத்துவடைக் குறித்து யு.ஜி.சி.யிடம் ஆலோசனைப் பெற்று, அதன் வழிக்காட்டுதல் படி மாநில அரசுகள் நடக்க வேண்டும் எனவும், ஆனால், தேர்வுகளை நடத்தாமல் மாணவர்களை கண்டிப்பாக தேர்ச்சி பெற செய்யக்கூடாது எனவும் நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த விஷயத்தில் யு.ஜி.சி.க்கு தான் முழு அதிகாரம் உள்ளது எனவும் கூறி, தொடரப்பட்ட் அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின், இறுதி செமஸ்டர் தேர்வுகளை, இந்த மாதம் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று, யு.ஜி.சி. சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.