இந்திய போர் விமானங்கள் குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு விற்பனை செய்ததாக, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவன மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மராட்டிய மாநிலம் நாசிக் அருகே ஒசர் என்ற பகுதியில் செயல்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில், போர் விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்பு காரணமாக இங்குள்ள செயல்பாடுகள் ரகசியமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இங்கு துணை மேற்பார்வையாளராக பணியாற்றும் தீபக் சிர்சாத் நடவடிக்கைகள் குறித்து தீவிரவாத தடுப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பான விசாரணையில், பாகிஸ்தானின் சர்வதேச உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உடன் தீபக் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தீபக்கை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 3 மொபைல் போன்கள், 5 சிம் கார்டுகள், இரண்டு மெமரி கார்டுகளை பறிமுதல் செய்தனர். அதில் இந்திய போர் விமானங்கள் குறித்த தகவல்கள், தயாரிக்கும் இடத்தின் படங்கள், விமான தள படங்கள் ஆகியவை இருந்துள்ளன. இவற்றை வாட்ஸ்அப் மூலம் ஐ.எஸ்.ஐ.,க்கு அனுப்பியுள்ளார். 1964-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட எச்.ஏல்.எல்., நிறுவனத்தில்,
விமான படையில் உள்ள மிக் 21 ரகத்தில் உள்ள எப்.எல்., பி.ஐ.எஸ்., மற்றும் எம் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. உள்நாட்டிலேயே முழுக்க வடிவமைக்கப்பட்ட சு-30 எம்.கே.ஐ., இங்கு தயாராகிறது. இது தவிர கே.31 ஏவுகணை உற்பத்திக்கும் இந்த அலகு உரிமம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான், சீனா உடனான எல்லைப்பிரச்னை வலுப்பெற்று வரும் நிலையில், விமானப்படை ரகசியங்கள் கசிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.