தெலுங்கானா மாநிலத்தில் திருமணத்திற்கு துணி வாங்கச் சென்றபோது ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் மணப்பெண் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தெலுங்கானா மாநிலத்தில் மகபூப் மாவட்டத்தைச் சேர்ந்த பிரமிளா என்ற பெண்ணுக்கு 10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக உறவினர்களை அழைத்துக் கொண்டு அவர் துணி வாங்க வாரங்கல் என்ற இடத்திற்கு ஆட்டோவில் சென்றிருக்கிறார். ஊரில் இருந்து சற்று தூரம் சென்ற நிலையில் அவர்கள் பயணித்த ஆட்டோ மீது எதிர்திசையில் வந்த லாரி பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பிரமிளா அவருடைய தாய், சகோதரி, சகோதரன், ஆட்டோ டிரைவர் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் லாரி டிரைவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.