புதிய கல்விக் கொள்கை தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆளுநர்கள் பங்கேற்கும் மாநாடு காணொலி காட்சி மூலம் தொடங்கியது.
புதுடெல்லி:
இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது . பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்தல் மற்றும் அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் வகையிலும் இந்த புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாடு முழுவதும் காணொலி காட்சி மூலம் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு புதிய கல்விக் கொள்கையின் சாதகங்கள், பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வந்த நிலையில்,புதிய கல்வி கொள்கை குறித்த ஆளுநர்கள் மாநாடு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று தொடங்கியது. மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தனர்.
‘உயர்கல்வியை மேம்படுத்துவதில் தேசிய கல்வி கொள்கையின் பங்கு’ என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாட்டில் மாநில ஆளுநர்கள் , துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாநில கல்வி அமைச்சர்கள், மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.