சுற்றுலா சென்ற இடத்தில், செல்ஃபி எடுக்க முயன்றபோது 1,000 அடி பள்ளத்தில் தவறிவிழுந்து இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் தாஹியில் வசிக்கும் தினேஷ் (25) மற்றும் பண்டி (22) ஆகிய இரண்டு இளைஞர்களும், பிரபல சுற்றுலாத்தலமான ராம்கர் கோட்டைக்கு சென்றுள்ளனர்.
அப்பகுதியில் மழை பெய்து, மூடுபனியுடன் காட்சியளித்ததால், அந்த சூழலில் புகைப்படம் எடுக்க விரும்பி, மலையின் ஓரத்தில் சென்றுள்ளனர். அப்போது இருவரும் செல்ஃபி எடுக்க முயன்றபோது, பாறை வழுக்கியதில் எதிர்பாராத விதமாக, இருவருமே ஒரே நேரத்தில், பள்ளத்தாக்கில் தவறி விழுந்துள்ளனர்.
இதுக்குறித்து அறிந்த போலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தேடுதலை தொடங்கினர். ஆனால், இரவில் வெளிச்சம் இல்லாததாலும், தொடர்ந்து கொட்டிய மழையாலும், தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்றுமுன்தினம் தவறிவிழுந்த இளைஞர்கள் இருவரையும், நேற்று காலையில் சடலமாக மீட்டனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர், இளைஞர்களின் உடல்கள், அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.