எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வேளாண் திருத்த சட்ட மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டன.
மத்திய அரசின் வேளாண் உற்பத்தி தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு ஏற்கனவே நிறைவேற்றப்பட்டன.
இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் 3 மசோதாக்களும் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது எனவும் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தன.
மசோதாக்களை நாடாளுமன்ற நிலை குழு மற்றும் தேர்வு குழுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். இருப்பினும், மசோதா குறித்து விவாதிக்கப்பட்டதால், எதிர்க்கட்சியின் தொடர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரியன், அவை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மீது மசோதா நகலை கிழித்து எரிந்தார். மேலும், பல்வேறு எம்.பிக்கள் மசோதா நகலை கிழித்து எரிந்தனர். மசோதாவிற்கு எதிராக அவை தலைவரை முற்றுகையிட எம்.பிக்கள் முயற்சி செய்தபோது, அவை காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும், அவை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மேசையில் இருந்த மைக் உடைக்கப்பட்டது. இப்படியாக, தொடர்ந்து, அமளியில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டதால், மசோதா மீது வாக்கு எதுவும் நடத்தப்படாமல் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
10 நிமிடங்கள் கழித்து அவை மீண்டும் பிற்பகல் 1.42 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளிக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. வேளாண் மசோதாக்கள் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவை நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மசோதா நிறைவேற்றத்தை கண்டித்து மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.