ஆன்லைனில் குதிரை பந்தயம் சூதாட்டம் நடத்திய 33 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிண்டியில் உள்ள பாரதி நகர் டேங்க் தெருவில் ஆன்லைனில் குதிரை பந்தய சூதாட்டம் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த இடத்தை சோதனை செய்தனர், அப்போது ஆதம்பாக்கம் பெரியார் 9வது தெருவை சேர்ந்த விக்னேஷ், வேளச்சேரி அவ்வையார் தெருவை சேர்ந்த கார்த்திக் உட்பட 7 பேர் ஆன்லைனில் குதிரை பந்தய சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்களை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.61 ஆயிரம் மற்றும் குதிரை பந்தய தகவல் அடங்கிய 7 புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், பாடி அண்ணா 3வது தெருவில் உள்ள மேன்சனில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கொளத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்த சீனிவாசன், பாடி மதியழகன் நகரை சேர்ந்த தாவூத் உட்பட 14 பேரை போலீசார் கைது செய்து, ரூ.11,055 மற்றும் சீட்டுகட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இன்னொரு சம்பவம் சைதாப்பேட்டை சின்னமலை ஆரோக்கிய மாதா நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட திருவல்லிக்கேணி கஜபதி தெருவை சேர்ந்த கண்ணன், சண்முகபுரத்தை சேர்ந்த தாமோதரன், ஆதம்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்த முனுசாமி உட்பட 12 பேரை போலீசார் கைது செய்து, ரூ.18 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.




