பேரறிவாளனை விடுதலை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேரறிவாளனுக்கு பரோல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு இன்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, இதுதொடர்பாக அவரது தாயார் அற்புதம்மாள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
உடல்நிலை மோசம்
என் மகனுக்கு உடல்நிலை மோசமாக உள்ளது. சர்க்கரை நோய், மூட்டுவலி, சிறுநீரகத் தொற்று எனப் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. வயதான எங்களுக்கு இருக்கும் ஒரே ஆதரவு என் மகன் மட்டுமே. உச்ச நீதிமன்றத்தில் இன்று பேரறிவாளனின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நான் விடுதலையை அதிகமாக எதிர்பார்த்தேன்.
விடுதலை
ஆனால், ஒரு வாரம் பரோல் மட்டுமே கிடைத்துள்ளது. ஜெயலலிதா என் மகன் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என எனக்கு உறுதியளித்தார். அவரது வழியில் ஆட்சி செய்யும் முதல்வர் பழனிசாமி என் மகன் விடுதலைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்’.
இவ்வாறு அவர் கூறினார்.