பிராமணர் சமூகத்தில் தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரம் இளைஞர்கள் மணப்பெண் கிடைக்காமல் வேறு மாநிலங்களில் எல்லாம் மணப்பெண்களை தேடி வருவதாக பிராமணர் சங்க தலைவர் நாராயணன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்த சூழ்நிலை காரணமாக பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிராமண பெண்களை தேடுவதற்காக ஒரு அமைப்பே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்தி படிக்கவும், பேசவும் தெரிந்தவரை இதற்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 முதல் 40 வயதுக்குட்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பிராமண இளைஞர்கள் தங்களுக்கேற்ற மணப்பெண்களை கண்டுபிடிக்க முடியாததால் திருமணம் செய்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமண வயதில் 10 பிராமண ஆண் குழந்தைகள் இருந்தால், தமிழகத்தில் திருமண வயதில் ஆறு பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர்.
எனவே லக்னோ மற்றும் பாட்னாவில் உள்ள மக்களுடன் தான் தொடர்பு கொண்டு வருகிறார்கள். பிராமணர்கள் மத்தியில் இந்த நடவடிக்கையை வரவேற்றாலும், வேறு கருத்துக்களும் உள்ளன.
திருமண வயதில் தமிழ் பிராமணப் பெண்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்றாலும் ஆண்களுக்கு மணப்பெண்கள் கிடைக்காததற்கு இது ஒன்றே காரணம் அல்ல என்றும் நகைகள், திருமண மண்டபத்தின் வாடகை, உணவு மற்றும் பரிசுப் பொருட்களுக்கான செலவுகள் மற்றும் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் திருமண விழாக்கள் உள்பட மொத்தமாக இந்த நாட்களில் திருமண நிகழ்ச்சிக்கு மட்டுமே குறைந்த பட்சம் ரூ. 12 முதல் 15 லட்சம் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும் என்றார்.
சந்தேகத்திற்கு இடமின்றி இது மணமகளின் குடும்பத்திற்கு மிகப்பெரிய பொருளாதாரச் சுமையாகும். சிலர் தங்கள் வாழ்நாள் சேமிப்பை செலவிடுவார்கள். மற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடனில் மூழ்கி இருப்பார்கள்.
இதில் மோசமாக பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கம், கீழ் நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழை பிராமணர்கள். ஏழை பிராமணக் குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக பல வருடங்களாக போராடுவதை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்.
பொருளாதார ரீதியாக வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மணமகன் வீட்டார் தங்கள் ஈகோவைக் கைவிட தயாராக இருந்தால் அவர்கள் தமிழ்நாட்டில் மணப்பெண்களைக் கண்டுபிடிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்