பொங்கல் பரிசு தொகுப்புடன், கடந்த ஆண்டு வழங்கப்பட்டது போன்று இந்த ஆண்டும் ரொக்க பணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளார்.
2021 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளது. அதில், பொங்கலுக்குத் தேவையான பொருட்களுடன், 2,15,48,060 குடும்பங்களுக்கு 1,088 கோடி ரூபாயில், மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இலங்கைத் தமிழர்களும் அடங்குவர்.
இதில் கரும்பு இடம்பெறாத நிலையில், பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதுபோன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு வழங்கப்பட்டது போன்று பணமும் பொங்கல் பரிசாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு பொங்கலுக்கு 2,500 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும்,முழு கரும்பும் வழங்கி வந்தோம். ஆனால் திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம், கரும்பை காணவில்லை. தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டு,தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை,
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என இந்த திமுக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவு செய்துள்ளார்.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, ‘ஏற்கனவே கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது’ என்றார். கரும்பும் பரிசாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்பட்ட வந்த நிதி உதவியை நிறுத்துவது என்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் நிதியுதவி தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பது ஏழை எளிய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. புதிதாக எதுவும் செய்யவில்லை என்றாலும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற திட்டத்தையாவது தொடர வேண்டும்.
எனவே பொங்கல் திருநாளை முன்னிட்டு அளிக்கப்பட்ட நிதி உதவியான 2500 ரூபாயைத் தொடர்ந்து அளிக்கத் தமிழக முதல்வர் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.